Related Articles
அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை? (பாகம் 5)
Superstar Rajinikanth-starrer 2.0 teaser gets outstanding response from all over
Celebrities convey wishes to Thalaivar's Petta motion poster
பேட்ட - இது தான் செம்ம வெயிட்டு தலைவா
சோபியா விவகாரம் குறித்து கருத்து கூற வேண்டியது தானே தலைவா?
தலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்
சந்திப்புகள் சொல்லும் மனிதநேயம்
அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை? (பாகம் 4)
ரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்
எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .
(Wednesday, 26th September 2018)

கேபிள் மூலம் வரும் சானல்களையே பெரும்பாலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த 90களின் இறுதியில் இப்படி ஒரு கதை சொல்வார்கள். ஒருவன் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆக்ஸிடெண்ட் ஆகி, தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று விட்டானாம். பல ஆண்டுகள் கழித்து குணமான அவனுக்கு, பழைய ஞாபகங்கள் ஏதும் இல்லாமல் போனதாம். ஒரு கைக்குழந்தைக்கு மூளையில் இருக்கும் தகவல் அளவுக்கே அவன் மூளையில் தகவல்கள் இருந்ததாம். எனவே தொடர்ந்து, ஞாபகத்தை வரவழைக்க எவ்வளவோ சிகிச்சைகள் செய்தார்களாம். எந்தப் பலனும் இல்லையாம். அதனால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவன் வீட்டுக்கு வந்ததும் ஓ இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையா என்றானாம். வீட்டாருக்கு, ஆஹா நினைவு திரும்பிவிட்டதே என்று ஒரே சந்தோஷம். ஆனால் வேறு எதுவும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அப்பா, அம்மா, அவன் பெயர் கூட தெரியவில்லை. அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமை என்பதை மட்டும் சரியாகச் சொன்னான் என எல்லோருக்கும் குழப்பம். சிறிது நேரம் கழித்துத்தான் அதற்கு பதில் தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் அந்த அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது. ஒரு மனிதனுக்கு எது வேண்டுமானாலும் மறந்து விடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பகலில் ராஜாதி ராஜா போடுவது மட்டும் மறக்காது. அவன் ஜீனில் கூட அந்த செய்தி கலந்து விடும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

முதன் முதலில் ராஜாதிராஜா படம் அறிவிக்கப் பட்ட போது ஓரளவு எதிர்பார்ப்பே இருந்தது. அப்போதெல்லாம் ஆண்டுக்கு மூன்று நான்கு ரஜினி படங்கள் வரும். இப்போது போல மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அல்ல. எனவே பட அறிவிப்பு வரும் போது ஏற்கனவே ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தப் பட அறிவிப்பின் போது கொடி பறக்குது படம் திரையரங்குகளில் இருந்தது. அந்தப் படமும் சரி, அதற்கு சற்று முன்னர் வெளியாகி இருந்த, ரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோனும் சரி பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் “ராஜாதி ராஜா” என்ற செய்தி கேள்விப்பட்டதும், இந்த டைரக்டர் ரஜினிக்கு செட் ஆவாரா எனவே ரஜினி ரசிகர்கள் பலரும் சந்தேகப்பட்டனர். பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச் சிமிழ், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே என ரிப்பீட் ஆடியன்ஸ் வரும் சில்வர் ஜூபிலிகளை அவர் கொடுத்திருந்தாலும் ரஜினியின் ஏரியாவான ஸ்டைல், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் அவர் வீக். நல்ல திரைக்கதை, இளையாராஜாவின் பாடல்கள், நகைச்சுவை இதுதான் அவரது கோட்டை. எனவே எப்படியும் பாட்டு நல்லா இருக்கும். இளைய ராஜா சொந்தப் படம் வேறு, சரி பார்ப்போம். என்ற சராசரி எதிர்பார்ப்பே அந்தப் படத்துக்கு இருந்தது.

1989 ஐ தமிழ்சினிமாவின் தங்க வருடம் எனச் சொல்லும் அளவுக்கு ஏராளமான வெள்ளி விழாப் படங்களும், நூறு நாள் படங்களும் வெளிவந்தன. பிப்ரவரியில் வருசம் 16 வெளிவந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ச்சில் ராஜாதி ராஜா வெளியானது, வழக்கமான ஆள் மாறாட்டக் கதை என்றாலும் பாடல்கள், ரஜினி, நகைச்சுவை என மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலாக்ஸாகப் போயி உட்கார்ந்து வரலாம்பா என பேசிக் கொள்வார்கள். அதற்கடுத்த மாதம் அபூர்வ சகோதர்கள், இரண்டு மாதம் கழித்து கரகாட்டக்காரன் என ஆல் டைம் பிளாக் பஸ்டர்களாக தொடர்ந்து இறங்கினாலும், ராஜாதி ராஜா சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. மதுரையில் ஒரே சமயத்தில் இந்த நான்கு படங்களும் வெவ்வேறு மூலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆர் சுந்தர்ராஜன் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்ற விதியை இந்தப் படம் மெய்ப்பித்து மேலும் ஒரு படி மேலே சென்றது. அந்த சமயத்தில் தான் கொடைக்கானலில் இருந்து தூர்தர்ஷன் ஒளிபரப்பு துவங்கி ஏராளமான வீடுகளில் கலர் டிவி வாங்கினார்கள். அவர்கள் அவ்வப்போது விசேஷ நாட்கள், உறவினர் வருகையின் போது வீடீயோ பிளேயர் மற்றும் சில கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் பார்ப்பார்கள். எங்க வீட்டுல ”டெக்கு” வாடகைக்கு எடுத்து படம் பார்த்தோம் என்று சொல்வது அந்நாளைய நடுத்தர வகுப்பு மக்களின் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது.

எப்படி அந்தக் காலத்தில் மக்கள் புது டேப் ரிக்கார்டர் வாங்கும் போது, ஒரு சுப்ரபாத கேசட்டை வாங்கிக் கொள்வார்களோ அது போல, இந்த டெக் எடுக்கும் போதெல்லாம் ராஜாதி ராஜா கேசட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த டெக் கடையில் நான்கைந்து ராஜாதி ராஜா கேசட் வைத்திருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் வருசம் 16, அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரனோட ஒப்பிட்டால் ராஜாதி ராஜா சிறந்த படம் அல்ல. ஆனாலும் ரஜினி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படங்களுக்கு ஈடு கொடுத்து அந்நாட்களில் ஓடியது மட்டுமல்லாமல் தொடர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸ்களை பல ரூபத்தில் பெற்று வந்தது ராஜாதி ராஜா. அந்தப் படத்தில் ரஜினி ”மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி” பாடலில் அணிந்து நடித்த வெள்ளை சட்டை, வெள்ளை பேகி பேண்ட், சின்ன பெல்ட்,கூலிங்கிளாஸ் பள்ளி மாணவர்களிடையே செம ஹிட். பெரும்பாலானவர்கள் அடுத்த ஆண்டு வெள்ளைச் சீருடையை பேகி மாடலிலேயே தைத்தார்கள்.

பத்தாம் வகுப்பு வரை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடும் படி அருகில் உள்ள பள்ளியிலேயே படித்த நான், பதினொன்றாம் வகுப்பிற்கு ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன். முதல் ஒரு வாரம் எல்லாமே புதிதாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. எல்லோரும் சகஜமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வாரம் கழித்து குரூப் குரூப்பாக பிரிந்து கொண்டார்கள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் இருப்பவர்கள் தங்களுக்குள் சில குரூப்புகளாகவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து படிப்பவர்கள் அவர்களுக்குள் சில பிரிவுகளாகவும் பிரிந்து கொண்டார்கள். பதினொன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தவர்கள் ஊர் மற்றும் படித்த பள்ளி அடிப்படையில் தங்களுக்குள் சில பிரிவாக பிரிந்து கொண்டார்கள். நான் கிட்டத்தட்ட தனி மரமாக விடப்பட்டேன்.

பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நாட்களிலேயே ஹாஸ்டல் வாழ்க்கை வெறுத்துப் போனது. டேஸ்காலர் மாணவர்களிடம் கிளாஸ் நேரத்தில் அரட்டை அடிக்க முடியாத படி ஆசிரியர்கள் எல்லாம் மிலிடரி ஆபிசர்களாய் இருந்தனர். என்னை வீட்டுக்கு அழைத்துப் போய் விடுங்கள் என கதறி வீட்டுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரும் எழுதிவிட்டேன். வீட்டில் இருந்து வந்து, சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விடும் இல்லையென்றால் ஊருக்கு கூட்டிப்போய் விடுகிறோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

இந்நிலையில் தான் சரவணன் என்னும் நண்பன் கிடைத்தான். அவனும் பதினொன்றாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்தவன் தான். ஓரிரு வாரம் கழித்தே சேர்ந்திருந்ததால் அவனும் எந்த குரூப்புடனும் ஐக்கியமாகாமல் இருந்தான். மாலை வேளைகளில் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது மனதை இலகுவாக்கியது. ஹாஸ்டல் பிடித்துப் போனது. சரவணன் நல்ல கலகலப்பான சுபாவம் கொண்டவன், சுயநலம் குறைவாக பொதுநலம் அதிகமாக எண்ணுபவன். நாளடைவில் எங்கள் குரூப்பில் இன்னும் ஒரு நண்பனும் சேர்ந்தான். நான் கமல் ரசிகன்,சரவணன் ஒரு அதி தீவிர ரஜினி ரசிகன். புதிதாய் சேர்ந்த சேகரும் ரஜினி ரசிகன். ஆனாலும் எனக்கும் சரவணனக்கும் இருந்த நட்பு நாள்தோறும் கூடிக் கொண்டே வந்தது. ரஜினி,கமல் சண்டை வந்தாலும் பரஸ்பரம் கிண்டல் கூட செய்து கொள்ள மாட்டோம். எங்களின் நட்புக்கு அடுத்துதான் சேகருக்கு இடம் இருந்தது.

எங்கள் ஹாஸ்டலில் அப்போது மாதம் ஒருமுறை வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து படம் திரையிடுவார்கள். அந்த மாதம் ராஜாதி ராஜா திரையிட்டார்கள். இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்தாச்சு என்று நான் ரூமிலிலேயே ரெக்கார்ட் எழுதிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். சரவணனும், சேகரும் படம் பார்த்துவிட்டு வந்தார்கள். ரூமிற்கு வந்தும் அவர்களிடையேயான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக நான் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.

அவர்களுக்கிடையே சிலாகித்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தொடர்ந்து ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பணக்காரன்,அதிசயபிறவி, தர்மதுரை என இரண்டு ஆண்டுகளில் ரஜினி படங்கள் வந்து கொண்டே இருந்தன. அவர்களுக்கிடையேயான பேசு பொருளும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இருவருக்கிடையேயான நட்பில் மூன்றாவது ஆளாய் வருபவர் யாராவது ஒருவருடன் மிக நெருங்கி விட்டால் இன்னொருவருக்கு ஏற்படும் மனத்துயரம் அதிகமாக இருக்கும். ஏறக்குறைய காதலி, இன்னொருவனை காதலிப்பது போல சொல்லொண்ணா மனத்துயரத்தில் ஆழ்த்தும். அந்த துயரை அப்போது நான் அனுபவித்தேன்.

ஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஹாஸ்டலில் சக மாணவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது அப்போது பெரிய சம்பிரதாயமாய் இருந்தது. ஒரு தாய் வயிற்றில் அடுத்துப் பிறப்போம் ரேஞ்சுக்கு எழுதிக் கொடுப்பார்கள். ஸ்டடி ஹவர்சில் இந்த கொஸ்டினைப் படிச்சிட்டு நாலு ஆட்டோகிராப் எழுதிட்டு அடுத்து அந்த கொஸ்டினைப் படிக்கணும் என்று ஷெட்யூல் போட்டெல்லாம் ஆட்டோகிராப் எழுதுவார்கள். பொதுவாக முதலில் பொது நண்பர்களிடம் வாங்கிவிட்டு, மிக நெருக்கமான நண்பர்களிடம் கடைசி நாள் அன்றுதான் வாங்குவார்கள்.

எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சரவணன் நிச்சயம் சேகரை விட எனக்குத்தான் அதிக உணர்வுடன் எழுதித்தருவான் என. கடைசிப் பரிட்சையான பயாலஜியை முடித்துவிட்டு ஆட்டோகிராப் நோட்டை நீட்டினேன். அவன் நோட்டில், அவன் இல்லாவிட்டால் நான் ஊருக்கே திரும்பி இருப்பேன் என்பது முதற்கொண்டு என் நட்பையெல்லாம் கொட்டி இருந்தேன். அவனும் சம்பிரதாய வார்த்தைகளாய் சிலாகித்து எழுதி இருந்தான். அடுத்து நான் ஒரு குறுகுறுப்பில் சரவணன், சேகருக்கு என்ன எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன். ”இந்த விடுதியிலேயே என் ஆத்ம நண்பன் நீதான்” என்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தான்.

எனக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.

- முரளி கண்ணன்

Courtesy : http://www.twitlonger.com/show/n_1sqlso3






 
0 Comment(s)Views: 531

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information