இணையத் தமிழ் மென்பொருளறிஞர் விருது பெற்ற எங்களது இணையத் தள மேலாளரும் நண்பருமான தகடூர் கோபியை www.rajinifans.com சார்பாக வாழ்த்துகிறோம்.
தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தருமபுரி. விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பயிலரங்கில் முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி), திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்), நம்முடைய இணையதள மேலாளரும் நண்பரும் ஆன திரு,கோபி (தகடூர்,அதியமான் மென்பொருள் உருவாக்கியவர்,ஐதராபாத்து) ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் இணையம், தமிழ்த் தட்டச்சு, தமிழ் 99 விசைப்பலகை,எ.கலப்பை,ஒருங்குகுறி,வலைப்பூ உருவாக்கம், தமிழ்மணம், மின்னஞ்சல்,உரையாட்டு,குழுக்கள்,நூலகங்கள் பற்றி மாணவர்கள்,ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்சியளிக்கும் முகாம் நடைபெற்றது.
முகாமின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற தருமபுரித் தமிழ்ச்சங்க விழாவில் நமது கோபியின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் இணையத் தமிழ் மென்பொருளறிஞர் என்னும் விருதை வழங்கி கௌரவித்தார்கள்.
தகடூர், அதியமான் உள்ளிட்ட தமிழ் மெனபொருள்களை இலவசமாக வழங்கி இணையத் தமிழில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் கோபிக்கு தர்மபுரிதான் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
|