இப்போதைக்கு எனக்கு அரசியலில் இஷ்டமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சொன்ன சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள்.
சூப்பர் ஸ்டாரின் முடிவுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிக நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.
Total 445 votes cast. |
Good decision |
316( 71.01%) |
|
Not a good decision |
80( 17.98%) |
|
Can't say anything |
49( 11.01%) |
|
எப்போதும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வருபவர்கள் நிறைய பேர். இம்முறை தெளிவான குட்டையிலும் மீன் பிடிக்க வருவார்கள். சூப்பர் ஸ்டார் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருக்கிறார். ரஜினியின் உண்மையான ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது.
சொன்னது என்ன? கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.
அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள் அவரவரர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஆனால் எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்.
இந்த வரிகள் புதிதல்ல. ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். ரசிகர்களில் ஒரு சிலர் சூப்பர் ஸ்டார் சொன்னதை கேட்டதேயில்லை. 1995 ஆண்டு காங்கிரஸ் உடனான மாற்று ஏற்பாடுகள் தோல்வியுற்ற நிலையில் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு பயணமானார்.
திரும்பி வந்து திமுக தாமக கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த நிலையிலும் தனது பெயரை அனுமதியின்றி பயன்படுததக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.
1999 தேர்தல் நேரத்திலும் தன்னுடைய பெயரையோ, படத்தையோ எந்தவொரு கட்சியோ, அமைப்போ, தனிநபரோ பயன்படுத்தக்கூடாது என்று தனி அறிக்கை வெளியிட்டார். 2002 பாபா படம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்திலும் இதையொத்த அறிவிப்பும் வெளியானது.
இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அந்நிலையில் அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க நான் நடவடிக்கை எடுப்பேன், நீக்கிய பின்பும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரஜினி ரசிகர் மன்றம் என்ற அமைப்பையே கேலிக்கூத்தாக்க நினைத்த மீடியாவுக்கும் ரசிகர்கள் என்கிற போர்வையில் செயல்படுபவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வரிகள். மாவட்ட தலைவர்களுக்கும், தலைமை மன்றத்திற்கும் உள்ள அதிகாரத்தை இதன் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் ரஜினியின் இந்த எச்சரிக்கை மன்றங்களை இனி நல்வழிப்படுத்தும்.
மற்ற நடிகர்களைப் போல் மன்றங்களோடு நெருக்கமாக இருந்து, பட வெளியீட்டின்போதெல்லாம் பணத்தை வாரியிறைத்து தன்னை முன்னிலைப்படுத்த நினைக்காதவர் ரஜினி என்பதை யாரும் மறுக்கவே மாட்டார்கள். 1995 பின்னர் ரஜினி மன்றம் தொடங்க அனுமதி மறுத்து, இனி புதிதாக மன்றங்களை யாரும் தொடங்க வேண்டாம்; இருப்பதே போதும் என்று அறிவிக்கவும் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் வேண்டும். அது ரஜினியைத்தவிர வேறு யாரிடமும் இருந்ததில்லை.
அரசியலுக்கு நான் வந்துதான் ஆகவேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
முக்கியமான வரிகள். ரஜினியைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்காது. இதுவரை தனனுடைய வாழ்க்கை சம்பந்த்ப்பட்ட முடிவுகளை அவரே எடுத்திருக்கிறார். பெங்களுரிலிருந்து சென்னை வரவேண்டும் என்பதில் ஆரம்பித்து அவரது திருமணம் வரை பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.
அவரை யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தியதில்லை. அப்படி சில கட்டாயங்கள் ரஜினியை தேடிவந்தபோது அதையெல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எழுபதுகளில் ஆரம்பித்து அவரைப்பற்றி படித்தாக வேண்டும்.
எத்தனையோ கட்டுபாடுகளையும், அச்சுறுத்தல்களையும் சமாளித்து சினிமாவுலகில் யாரும் எட்டமுடியாத இடத்தை ஒரு சில வருடங்களிலேயே எட்டியவர். ரசிகர்கள் என்கிற போர்வையில் அவரை கட்டாயப்படுத்தியவர்களுக்கு இதெல்லாம் புரியாமல் போனதுதான் ஆச்சர்யம்.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது. அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடைன் இணைவதை நான் வரவேற்பேன்.
மிகவும் முக்கியமான வரிகள். உலகத்திலேயே ஒரு தனிநபர் அரசியலுக்கு வரலாமா கூடாதா என்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து சாதனை செய்தது தமிழ் மீடியாதான். எத்தனையோ போர் எந்தவித தகுதியும் இல்லாமல் புனிதமான அரசியலை பாழ்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சினிமா நடிகர் என்கிற ஒரே காரணத்தினால் இப்படியோரு விவாதத்தை கடந்த 15 ஆண்டுகளாக இன காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து செய்து வருகிறது.
ரஜினியின் ஜெராக்ஸாக சினிமாவுலகிலும் பொதுஇடங்களிலும் உலா வந்தவர்கள் இன்று கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு முன்னுக்கு வந்த நேரத்திலும் தமிழ் மீடியா இந்த விவாதத்தை மட்டும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நிறைய.
சமீபத்தில் கூட ரஜினி அரசியலுக்கு வரத்தேவையில்லை என்று மக்கள் கருதுவதாக லயோலா கல்லுரியின் கருத்துக்கணிப்பை முடிந்தவரை திரித்து எழுதினார்கள். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்றெல்லாம் பத்திரிக்கைகள் தலைப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் இதுவொரு சரியான பதிலடி.
ரஜினி தன்னுடைய ரசிகர்களை கைவிட்டுவிட்டார் என்று யாரும் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை என்பதற்காகத்தான் கடைசி வரிகள். தன்னைப் பற்றி நல்ல விதமாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளும் கவர் பாலிடிக்ஸ் பழக்கம் ரஜினிக்கு என்றும் இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை என்பது தமிழ் மீடியா கவனிக்க வேண்டிய விஷயம்.
எது எப்படியோ இதுவொரு நல்ல ஆரம்பம். அரசியல் என்கிற போதையில் சிக்கி சீரழிவதை விட்டுட்டு ரசிகர்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவேண்டும் என்று பல வருஷங்களாக தான் சொன்னதையே இம்முறை கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். நல்லது செய்வதற்கு அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும என்பதில்லை. இது ரஜினிக்கு புரிந்திருக்கிறது. பெரும்பாலான ரசிகர்களுக்கும் புரிந்திருக்கிறது என்பது தொடரும் ஆதரவிலிருந்து தெரிய வருகிறது. இனி புரிய வேண்டியது ஒரு சில ரசிகர்களுக்குத்தான்.
|