மராட்டிய மாநிலத்தின் அரசியல் தலைவர் பால் தாக்கரே நேற்று எழுதிய தலையங்கம் இது. உடனே பால் தாக்கரே பாராட்டு நமக்கு எதற்கு என கமெண்ட் எழுத ஆரம்பித்துவிடாதீர்கள்.
நல்ல விஷயம் எங்கே இருந்தாலும் வரவேற்பதும், நியாயமற்றதை யார் செய்தாலும் எதிர்ப்பதும் ரஜினியின் குணம்.
இங்கு ரஜினியை ஒரு பேராளியாக சித்தரித்துள்ளார் பால் தாக்கரே. தமிழர்களுக்காக ரஜினி உரிமைக் குரல் கொடுப்பதைப் போல, மராட்டியர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை என்பது அவர் கருத்து.
நம்மவர்களோ, ரஜினியை தமிழர்களுக்கு எதிராக இன்னும் எப்படியெல்லாம் காட்டலாம், கட்டுக் கதை எழுதலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழினத்துக்காக ரஜினியைப் போல அக்கறை காட்டுபவர் யாரும் இல்லை என்ற பால் தாக்கரேவின் கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மற்றபடி அது மராட்டியமோ, தமிழகமோ... பிராந்தியவாதத்தை ரஜினி ஒருபோதும் ஏற்பவரில்லை.
சாம்னாவில் வெளியாகியுள் பால் தாக்கரேவின் தலையங்கம்:
இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டித்தும், அங்கு தமிழர்கள் படும் துயரங்களையும், வேதனையையும் உணர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இந்த முடிவை எடுத்ததற்காக ரஜினியை வாழ்த்துகிறோம். இதை பிராந்தியவாதம் என்று நாங்கள் கூற மாட்டோம்; தேசியவாதம் என்று தான் நாங்கள் அழைப்போம். இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினிகாந்த் கவலைப்படுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் அனைவரும் ஒன்றாக உள்ளனர். இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர்.
தேசத் துரோகிகளா?
இதே போன்ற பிரச்சினையை நாங்கள் எழுப்பினால் தேசத்தை உடைக்க முயற்சி செய்வதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். தமிழர் பிரச்சினைகளுக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வழங்கக் கோரி போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும் மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா?
ரஜினி போல யாரும் இல்லை!
மராட்டிய மாநிலம் உருவாகுவதற்காக 105 பேர் தங்கள் உயிரை விட்டுள்ளனர். ஆனாலும் ரஜினிகாந்தை போல் யாரும் இதுவரை மராட்டியத்தில் உருவாகவில்லை.
தமிழகத்தில் ரஜினிகாந்தின் பணிகள் முடிந்து விட்டன. இனி அவர் மராட்டியத்துக்கு வந்து மராட்டியர்களுக்காக போராட வேண்டும்.
-சங்கநாதன்
|