இல்லறமா? துறவறமா?
ரஜினி ஆலோசனை
ரஜினிகாந்த், புகழின் உச்சியில் இருந்தபோது இல்லறத்தில் இருந்து
ஒதுங்கி, துறவியாக ஆலோசித்தார் என்பது, பலருக்கு ஆச்சரியமாக
இருக்கும். ஆனால் அது உண்மை.
1980-களின் பிற்பகுதியில் "ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா'' இயக்கத்துடன்
ரஜினிகாந்துக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தன்னுடைய வீட்டிலேயே அந்த
இயக்கத்தினருக்கு இடம் கொடுத்தார். மிக அதிகமான புகழும், பணமும்
இருந்தும் கூட ரஜினிக்கு நிம்மதி இல்லை. ஆன்மீகத்தில் பற்று
அதிகரித்தது.
அப்போது, தன் குடும்ப நண்பரான ஒரு பேராசிரியரிடம் அவர் கூறினார்:-
"சார்! இந்து தர்மப்படி, குடும்ப வாழ்க்கையில் நாம் வாழும்போது,
பட்டும் படாமலும் இருக்க வேண்டும். புளியம் பழமும், ஓடும் போல,
ஒட்டாத நிலையில் இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு, உரிய கல்வியும், வாழ்க்கை பற்றிய தெளிவும்
தந்துவிட்டால் போதும். சொத்துக்கள் கூட தேவை இல்லை. அதிக
சொத்துக்கள் அவர்களைச் சோம்பேறிகளாகவும், சுய முயற்சி
இல்லாதவர்களாகவும் செய்துவிடும்.
எனக்கு நல்ல மனைவி இருக்கிறார். அவர் பொறுப்பில் குழந்தைகளை விட்டு
விட்டு, ஆன்மீக வழியில் செல்லலாம் என்று கருதுகிறேன்.''
இவ்வாறு ரஜினி கூறினார்.
பாலசந்தரிடம் கோரிக்கை
இந்தக் காலக்கட்டத்தில், கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின்
படத்திலும், ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் படத்திலும் நடிக்க,
ரஜினிகாந்த் அட்வான்ஸ் வாங்கியிருந்தார்.
ஒருநாள் திடீரென்று பாலசந்தர் வீட்டுக்கு ரஜினி சென்றார். "நான்
நடித்ததெல்லாம் போதும். இனி நடிக்கமாட்டேன். நான் சாமியாராகப்
போகிறேன். இந்தாங்க, நீங்க எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்!'' என்று
அட்வான்சாக வாங்கியிருந்த பணத்தை நீட்டினார்.
அந்தப் பணத்தை பாலசந்தர் வாங்கிக்கொள்ளவில்லை. ரஜினியை ஏற இறங்கப்
பார்த்தார். "சாமியாராப் போகணும், அவ்வளவுதானே! சரி, போ!'' என்று
கூறினார்.
"இந்தப் பணத்தை பிடிங்க. நான் போறேன்'' என்றார், ரஜினி.
பாலசந்தர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, "உன்னைப்பற்றி
எனக்கு நல்லாத் தெரியும். இப்போ, உன் மனசிலே சாமியாரா போகணும்னு
தோன்றியிருக்கு. அதை யார் தடுத்தாலும் நீ கேட்கப்போறதில்லை. அதனால்
நான் அதை தடுக்கப் போறது இல்லை. ஆனாலும், அட்வான்ஸ் பணத்தைத்
திருப்பித் தரவேண்டாம். அதை நீயே வச்சுக்க. உன் இஷ்டப்படியே போ.
என்றைக்காவது ஒருநாள், மீண்டும் நடிக்க வேண்டும் என்று நிச்சயமாகத்
தோன்றும். அப்போது நீ திரும்பி வா!'' என்று கூறினார்.
அதற்கு மேல் தன் குருநாதரிடம் வாதாடாமல், பணத்துடன் திரும்பினார்.
மனம் தனிமையை நாடியது. சில நாட்கள் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்.
பின்னர் சென்னை திரும்பினார்.
முத்துராமன் சந்திப்பு
இந்த சமயத்தில் ரஜினியின் அதிக படங்களை டைரக்ட் செய்தவரான
எஸ்.பி.முத்துராமன், அவரை சந்தித்தார்.
"ரஜினி! கோடிக்கணக்கான ரசிகர்கள் உனக்கு இருக்கிறார்கள். இவ்வளவு
பேருடைய அன்பும், ஆதரவும் ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும். கடவுள்
அருளால் உனக்கு கிடைத்திருக்கிறது. இப்போது நீ தனி மனிதன் அல்ல.
மக்களின் பொதுச்சொத்து. எனவே தொடர்ந்து நடிக்க வேண்டும்'' என்றார்,
எஸ்.பி.முத்துராமன்.
ரஜினி இதை பொறுமையாக கேட்டுக்கொண்டார்.
முத்துராமன் தொடர்ந்து சொன்னார்:-
"படங்களில் நீ நடிப்பதால், பலன் அடைகிறவர்கள் ரசிகர்கள் மட்டும்
அல்ல. படத்துக்கு கதை-வசனம் எழுதுகிறவர்கள், இசை அமைப்பவர்கள்,
பாடுகிறவர்கள், ஒளிப்பதிவு செய்கிறவர்கள், தயாரிப்பாளர்கள்,
தியேட்டர்காரர்கள், நோட்டீஸ் ஒட்டுகிறவர்கள் என்று லட்சக்கணக்கான
பேர் உன்னால் வாழ்க்கை நடத்துகிறார்கள். நீ படத்தில்
நடிக்காவிட்டால், இவ்வளவு பேரும் பாதிக்கப்படுவார்கள்.''
முத்துராமன் சொன்னதையெல்லாம் ரஜினி கேட்டுக்கொண்டாரே தவிர, பதில்
ஏதும் கூறவில்லை.
நடிகர் கமலஹாசன் மற்றும ரஜினி மீது அன்பு கொண்ட பலரும் ரஜினியை
சந்தித்துப் பேசியும், அவர் மனம் மாறவில்லை. தன் முடிவில் உறுதியாக
இருந்தார்.
ரசிகர்களின் சக்தி
இதற்குள் விஷயம் வெளியே பரவி விட்டது. ரஜினியின் ரசிகர்கள் பெரும்
அதிர்ச்சி அடைந்தனர்.
ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக ரஜினியின் வீட்டுக்குச் சென்றார்கள். "வேண்டாம்,
இந்த முடிவு!'' என்று கெஞ்சினார்கள்.
ரஜினி மவுனமாக இருந்தார்.
"உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால், தீக்குளிப்போம்'' என்று
ஆவேசத்துடன் முழக்கமிட்டார்கள், ரசிகர்கள்.
ரசிகர்கள் தன் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்,
ரஜினி. தன்னிடம் எந்த சிறு உதவியும் பெறாதவர்கள், தனக்காக உயிரையும்
கொடுக்கத் தயாராக இருப்பதைக்கண்டு கண் கலங்கினார்.
அவர் மனம் மாறியது. தொடர்ந்து நடிக்க முடிவு எடுத்தார்.
ரசிகர்களின் அன்பு, ரஜினியிடம் புதிய உத்வேகத்தை உண்டாக்கியது.
முன்பைவிட வேகத்துடனும், துடிப்புடனும் நடிக்கலானார்.
(விஜயசாந்தியுடன் நடித்த "மன்னன்'' - நாளை)
ரஜினி விரும்பும் பொன்மொழி
"எவன் ஒருவனும் ஒன்றை விரும்பி விட்டால், அதை அடைவதில் இருந்து அவனை
உலகின் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.''
- இது ரஜினி வீட்டு வரவேற்பு அறையில் பளிச்சிடும் பொன்மொழி. இது
விவேகானந்தர் கூறியதாகும்.
>>> Part
72
|