`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்\' பாரதிராஜா புகழாரம்

Rajinikanth rajini253

"ரஜினிகாந்த் வெறும் நடிகர் மட்டும் அல்ல. அவருக்குள் அபாரமான கலைத்திறமை இருக்கிறது. ஒரு நல்ல டைரக்டரே இருக்கிறார்'' என்று டைரக்டர் பாரதிராஜா கூறினார்.

பாரதிராஜாவின் "16 வயதினிலே'', "கொடிபறக்குது'' ஆகிய படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் தனது அனுபவம் பற்றி பாரதிராஜா கூறியதாவது:-

இடைவெளி

"பதினாறு வயதினிலே சினிமாவிற்குப் பிறகு, எனக்கும் ரஜினிக்கும் இடையே பெரிய `கேப்' இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்டோம்.

அப்போது அவர் `சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு வந்திருந்த நேரம். ஆனாலும் மனிதாபிமானத்தில் அவரிடம் எந்தவித மாறுதலும் இல்லை. இன்றும் அப்படித்தான். ஒரே மாதிரி இருப்பதுதான் அவரது சுபாவம். அந்த சந்திப்பு முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு அவரை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ரஜினியிடம் இதைச் சொன்னபோது, "இப்போதைக்கு முடியாது'' என்றார். ஆனால், அவரே சில மாதங்களுக்குப் பிறகு இது விஷயமாய் போன் செய்து நடிக்க ஒப்புக் கொள்வதாகக் கூறினார். "உங்கள் டைரக்ஷனில் நடிக்க பயமாக இருக்கிறது'' என்றும் அப்போது அவர் கூறினார்.

நான் பதிலுக்கு "ஒரு சூப்பர் ஸ்டாருக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை'' என்றேன்.

உடனே அவர், "என்ன சார்! நீங்களும் சூப்பர் ஸ்டார்னு சொல்லி ஒதுக்கிடறீங்களே?'' என்று பொய்யாக கோபித்துக்கொண்டார்.

அதன் பிறகு நாங்கள் முன்பு இருந்ததைவிட அதிக நெருக்கமாகி விட்டோம்.

வேகம்

படப்பிடிப்பின்போது அவரது நடிப்பு எனக்கு வியப்பாக இருந்தது. அவ்வளவு வேகம். அந்த வேகம்தான் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. வசனங்களை முன்பின் இடம் மாற்றிப் பேசும் ரஜினி ஸ்டைல் அலாதியானது. எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாதபடி அவரிடம் அந்த வேகமும், ஸ்டைலும் இருந்து கொண்டே இருக்கும்.

அப்போதுதான் அவருக்குள் இருக்கும் அபாரமான கலைத்திறமையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

Rajinikanth rajini254

அவருக்குள் ஒரு இயக்குனர்

அவரிடம் சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தால் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவருக்குள்ளும் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவரது இயக்குனர் திறமை ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்று நம்புகிறேன்.

ஆனால் `கொடி பறக்குது' நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், கீழ் மட்டத்தில் அதற்குரிய வசூலைப் பெற்றுவிட்டது. அந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ரஜினிக்கு அது திருப்தியாகவே இருந்தது.

"பதினாறு வயதினிலே'' அனுபவம் என்று பார்த்தால், ரஜினிக்கு அது ஒரு முக்கியமான கேரக்டர். எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்திருந்தார்.

வித்தியாசமான வசனம்

இன்று "என் வழி தனி வழி'' என்று அவர் வசனம் பேசினால் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். இதற்கு முன்பே அதாவது, "பதினாறு வயதினிலே'' சினிமாவிலேயே ரஜினி இதுபோன்ற வித்தியாசமான வசனங்களைப் பேச ஆரம்பித்து ரசிகர்களைக் கவர ஆரம்பித்து விட்டார் என்பதுதான் உண்மை.

Rajinikanth rajini255

`இது எப்படி இருக்கு?' வசனத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ரஜினி அப்போது ராயப்பேட்டையில் ஒரு அறையில் தங்கியிருந்தார். படத்தில் நடிக்குமாறு கேட்டதும், "ஓகே! சரி ஆகட்டும்'' என்று ஒற்றை வார்த்தையாக அதையும் வேகமாகச் சொன்னார். இதுதான் அவரது இயல்பு. அந்த இயல்பே திரைப்படங்களில் அவரது ஸ்டைலாகப் பிரதிபலிக்கிறது.

அதேபோல், புதுமுகமாக அவர் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை `கருத்தாக' நடந்து கொள்வதும் அவரது தனிச்சிறப்புதான்.''

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

(தமிழ் மக்களின் மனித நேயம்: ரஜினி புகழாரம் - நாளை)

***

ரஜினி `சுயதரிசனம்'

"நான் உண்மையே பேசிப் பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பேர் வந்திட்டா பொய் பேசவேண்டிய நிலைமையும் வந்துவிடும்.

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட காலத்திலேயே உண்மை பேசிவிட்டு, வசதியான வாழ்க்கை அமைந்தபின் இப்போது பொய் பேச மனதுக்கு பிடிக்கவில்லை. இனிமேல் வாழப்போற காலம் முழுவதும் பொய் பேசாமல் இருந்து விடவேண்டும் என்று தோன்றுகிறது.''

- ரஜினிகாந்த்.