கஜா புயல் நிவாரணப் பொருட்களில் ரஜினி படம் உள்ளது என்று விமரிசித்து "நியூஸ் 18" செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு செய்தி நிறுவனம் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ரஜினி பற்றிய செய்தி என்றால், என்ன வேண்டும் என்றாலும் எழுதி மக்களிடையே வெறுப்புணர்வை தோற்றுவிக்க வேண்டும் என்று செய்வது எவ்வளவு மோசமான மனநிலை. 

ரஜினி எதுவும் குறிப்பிடாமல் செய்தால், ரஜினி எதுவுமே செய்யவில்லை என்பது. 

பணம் அதிகமாகக் கொடுத்தால், விளம்பரத்துக்காகச் செய்வது என்பது. 

குறைவாகக் கொடுத்தால், பணமிருந்தும் மனமில்லை என்பது. 

நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஓட்டினால், விளம்பரம் என்பது. 

இவர்கள் அனைவரின் பிரச்னை உதவியோ, ஸ்டிக்கரா அல்ல, ஒற்றைப் பெயர் "ரஜினி" 

ரஜினி என்ன கூறினாலும் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பதே இவர்கள் தலையாய நோக்கம்! 

 

இதற்குப் பதில் சொல்லுங்க? 

தற்போது ஸ்டிக்கர் ஒட்டியதாலே ரஜினி மக்கள் மன்றம் செய்த உதவி வெளியே தெரிகிறது. 

இதைச் செய்யவில்லை என்றால், நாளைக்கு எதைக் காட்டி நாங்களும் உதவி செய்தோம் என்று கூறுவது? 

இதே வாய் தான் நாளைக்குக் கூசாம, புயல் பாதிப்பில் ரஜினி மக்கள் மன்றம் எதுவுமே செய்யவில்லை என்று கூறும். 

 

இதில் என்ன தவறு? 

இது அரசாங்க பொருட்களோ, உதவியோ, மற்றவர்கள் கொடுத்த பொருட்களோ அல்ல. ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது சொந்த பணத்தில் செய்யும் உதவி. 

இதில் ரஜினி படத்தைப் போடுவதில் என்ன குறை கண்டீர்கள்? 

 

விளம்பரமா? அடையாளமா? 

ஸ்டிக்கர் ஒட்டுவது நாங்கள் செய்த பணியை மக்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமே! 

சமூகத்தளங்களில் கேட்டது போல, நியூஸ் 18 ஒரு இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்று தங்கள் மைக்கில் "நியூஸ் 18" என்று பெயர் பொறிக்கப்பட்ட மைக்கை ஏன் நீட்ட வேண்டும்? 

மக்களிடையே பேசும் போது தங்களை ஏன் நியூஸ் 18 என்று அடையாளப்படுத்த வேண்டும்? மக்களுக்குச் செய்திகள் மூலம் நல்லது செய்தால், ஏன் நியூஸ் 18 என்று கூற வேண்டும்? 

எதுவுமில்லாமல் செய்யலாமே! 

ஏன் செய்கிறீர்கள் என்றால், களத்தில் நீங்களும் இருந்தீர்கள் என்பதை உறுதிப்படுத்தவே! 

இப்ப சொல்லுங்க நீங்க செய்வது விளம்பரமா? அடையாளமா? 

அதோடு ரஜினியை பிடிக்காதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், கெட்டு போன உணவை, ரஜினி மன்றத்தினர் கொடுத்தார்கள் என்று கொடுக்க வாய்ப்புள்ளது. 

நாளைக்கு எதுவும் பிரச்னையென்றால், யார் எங்களுக்கு ஆதரவு தர போகிறீர்கள்? இதே வாய் தானே அன்றும் எங்களை விமர்சிக்கும்?! 

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து கொடுக்கும் உணவுகளை, உணவு தரம் சரிபார்க்கப்பட்டே கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ரஜினி மக்கள் மன்றத்தினரே! 

யார் கூறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். நாம் கொடுக்கும் பொருட்களில் குறைந்த பட்சம் மன்ற லோகோவையாவது அவசியம் ஒட்டுங்கள். 

நாம் மற்றவர்கள் பணத்திலோ, பொருட்களிலோ ஒட்டவில்லை. எனவே, இதில் வருத்தப்பட எதுவுமில்லை. 

நாம் ஸ்டிக்கர் ஒட்டினோம் என்று இன்று அர்த்தமற்று விமர்சிப்பவர்கள் தான், நாளை நம்மை ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சிப்பார்கள். 

எனவே, அதற்கு இடம் தர வேண்டாம். அனைத்திலும் நம் அடையாளம் இருக்க வேண்டும். 

 

கெட்டதிலும் நல்லது 

நியூஸ் 18 நமக்குக் கெட்டது செய்வதாக நினைத்து நல்லதே செய்துள்ளது. 

ரஜினி பற்றிய விமர்சனங்கள் என்றால் போட்டி போட்டு விவாதிக்கும், செய்தியாக்கும் தமிழகச் செய்தி நிறுவனங்கள் அவர் பற்றிய நல்லதை கூறாமல் மறைத்து விடுவார்கள். 

இதனால், நாம் மக்களுக்கு இவ்வளவு உதவி செய்தும் இதை மக்களிடையே கொண்டு செல்ல மாட்டார்களே! என்ற கவலையில் இருந்தோம். 

ஆனால், இவர்கள் நமக்குக் கெடுதல் செய்வதாக நினைத்து நாம் செய்த உதவியை அனைவருக்கும் (இந்தியா முழுக்க) கொண்டு சேர்த்து நல்லது செய்துள்ளார்கள். 

எனவே, நியூஸ் 18 மற்றும் மற்ற ஊடகங்களுக்கு நன்றி :-) . 

இறுதியாக, யார் எப்படி உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தான் சென்று சேர்கிறது. எனவே, போட்டி பொறாமைகளைத் தவிர்த்து மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

குறை கூற யோசிக்கும் நேரத்தில், மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை யோசிப்போம்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!

- கிரி