ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
எனக்கு கமல் நடிப்பு பிடிக்கும். ஆனால் நான் தலைவர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். அட, வெறியன்னுகூட வச்சுக்கங்க..., என்கிறார் பருத்தி வீரன் என்ற ஒரே படத்தில் உலகப் புகழ் பெற்றுவிட்ட நடிகர் கார்த்தி.
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிலிருந்த கார்த்தியுடன் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.
பேச்சு வாக்கில் தனக்குப் பிடித்த ஹீரோக்கள் பற்றிக் குறிப்பிட்ட கார்த்தி ரஜினி பற்றிப் பேசும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
எங்கப்பாவும், ரஜினி சாரும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள். அது எல்லாருக்கும் தெரியும். சொல்லப்போனா... தமிழ் சினிமாவில் வேறு யாரையும் விட உரிமையுடன் ரஜினி சாருடன் பழகக் கூடியவர் அப்பா. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
சின்ன வயசிலருந்தே எனக்கு ரஜினியின் ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். நான் மட்டுமல்ல... என் வயசில் உள்ள எல்லாருக்கும் அப்படித்தான். வளர்ந்து சினிமாவை ஒரு கவலைஞனா பார்க்கத் தொடஙஅகிய பிறகு கமல் நடிப்பும் பிடிக்க ஆரம்பிச்சது.
ஆனால் நான் ரஜினி ரசிகன்தான். என்ன... தனியா மன்றம் வைக்கல... மற்றபடி ஒரு சராசரி ரசிகனுக்கு கொஞ்சமும் குறையாத ஆர்வம் அவர் மேல இப்போதும் உண்டு எனக்கு.
ரஜினி சாரைப் பார்த்துதான், நாமும் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யணும் என்ற லட்சியம் எனக்கு வந்தது. அதனால்தான் முதல்கட்டமா அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து அகரம் பவுண்டேஷன் மூலமா கல்விப் பணியை ஆரம்பிச்சிருக்கேன்... , என்றார் கார்த்தி.
பருத்தி வீரன் படத்தைப் பார்த்த ரஜினி, கார்த்தியை அழைத்து அரைமணி நேரம் பாராட்டினாராம்.
இதை எனக்குக் கிடைத்த ஒரு பெரிய விருதாகக் கருதுகிறேன், என்கிறார் கார்த்தி. ஏன் தெரியுமா?
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
- சங்கநாதன்