சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி - ரசிகர்கள் உற்சாகம்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தான் நலமாக இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இன்று இரவுதான் வீட்டுக்கு வந்தேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் உடல் நலம் குறித்து விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
சென்னை திரும்பிய ரஜினி,குடும்பத்தினருடன் தனது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
இந்நிலையில், கடந்த 28-ம்தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்கு செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பை சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரதுகுடும்பத்தினரும், ரசிகர்களுக்கு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு 5 ஆவது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும் சிகிச்சை விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு காவேரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவர் காரில் இருந்து இறங்கி நடந்து வர வாயிலில் ஆரத்தித் தட்டுடன் காத்திருந்த அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றர். உடன் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இருந்தார்.
ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு வதந்திகளும் வெளியாகிவந்த நிலையில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.




