குசேலன்: சில உண்மைகள், உங்கள் பார்வைக்கு!
குசேலன் நஷ்டம், தியேட்டர்களை விட்டு தூக்கப் போகிறார் கள்.. வேறு காட்சிகளைச் சேர்க்கப் போகிறார்கள்... இல்லையில்லை, ரஜினி அடுத்த படம் நடித்து ஈடுகட்டப் போகிறார்... எவ்வளவோ செய்திகள்.
செய்திகள் என்ற பெயரில் வக்கிரப் பதிவுகள்.
அவற்றை விடுங்கள். உங்களுக்கு மீண்டும் குசேலன் தொடர்பான சில உண்மைகள்.
உடனே, இப்படியெல்லாம் தினமலரில் வந்திருக்கிறதா... தினகரனில் வந்திருக்கிறதா என்று கேட்காதீர்கள். இந்த உண்மைகளைச் சொல்லும் நெஞ்சுரமும், யோக்கிதையும் அவர்களுக்குக் கிடையாது. ரஜினியை வைத்து உயிர் பிழைத்து, மீண்டும் அந்த ரஜினி என்ற மரத்தின் மீதே கூர் பார்த்த கத்திகளே இவர்கள்.
1994-96 நிகழ்வுகளை அசைபோட்டுப் பாருங்கள். தினகரன், தினமலர், சுதேசமித்திரன், கதிரவன், மாலைமுரசு, ஆவி, ஜூவி, தமிழன் எக்ஸ்பிரஸ்... இன்னும் இப்படி பல பத்திரிகைகள் தாக்குப் பிடிக்கப் பயன்படுத்திய பவர்புல் மந்திரம் 'ரஜினி' என்பது புரியும்.
எனவே இவர்கள் சொல்லி அது எடுபடப் போவதும் இல்லை. ஆதாரத்தின் ஒரு பகுதியை முன்பே உறுதியளித்தது போல் இங்கே தந்திருக்கிறேன். மீதியையும் தருவேன்.
நம்பிக்கையான நண்பர்கள், ஆதாரங்கள் மூலம் கிடைத்த இந்த உண்மைகளைப் படியுங்கள்... முடிந்தால் நீங்களும் உங்கள் சொந்த முயற்சியில் குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள்!
சென்னையில் குசேலன் வசூல்...
முதல் வாரம் அதாவது முதல் ஆறு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் குசேலன் வசூலித்த தொகை ரூ.3 கோடி! அதன் பின்னர் வந்த 14 நாட்களின் முடிவில் மேலும் ரூ.1.43கோடி கலெக்ஷன் பார்த்திருக்கிறார்கள். ஆக கிட்டத்தட்ட ரூ.4.5 கோடியைக் கொட்டியிருக்கிறது குசேலன்!!
நினைவு படுத்திக் கொள்ளுங்கள் இந்த வசூலைப் பெற சிவாஜி 30 நாட்களைத் தாண்ட வேண்டியிருந்தது. ஒரு சின்ன கால்குலேஷன் போட்டுப் பாருங்கள் உண்மை உங்களுக்கே விளங்கும். இந்தத் தகவல் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் முக்கிய ஊழியர் சொன்னது.
வெளியூர்களில் ஏற்கெனவே சொன்னது போல் பிளாட் ரேட்டில் விற்றிருக்கிறார்கள். முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் அவுட்ரைட் டிக்கெட்டுகளாக ஷோவுக்கு 1000 டிக்கெட்டுகள் வரை விற்றிருக்கிறார்கள். இவற்றில் 40 சதவிகிதம்தான் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.
சென்னை நகர வசூலையும் சேர்த்து முதல் வாரம் மட்டும் 26 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்திருக்கிறது குசேலன், தமிழகத்தில் மட்டும்.
பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையோடு நம்மிடம் பிரமிட் சாய்மிரா அதிகாரி இப்படிக் குறிப்பிடடார்:
உண்மையான கணக்கைக் காட்டினால் ஒருத்தருக்கும் நஷ்டம் வராது. ஆனால் அரசுக்குக் காட்டும் கணக்கைத்தான் இவர்கள் காட்டப் போகிறார்கள். இந்தக் கணக்கை எங்களிடம் காட்டி 30 சதவிகிதம் நஷ்டஈடு தருமாறு திரையரங்க உரிமையாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுமாதிரி இன்னும் பக்காவான நஷ்டக் கணக்கை எங்களாலும் காட்ட முடியும். அதனால்தான் நாங்களும் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறோம், என்கிறார் அந்த அலுவலர்.
அடுத்த விஷயம்...
குசேலன் தொலைக்காட்சி உரிமை. ரூ.7 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு!
சிவாஜி, தசாவதாரத்தைவிட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலை போயிருக்கிறது. இந்தத் தொகை முழுமையாக பாலச்சந்தருக்கே தரப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.
ஆந்திர விநியோகம், இதர மாநில விநியோகம், வெளிநாட்டு விநியோகம், ஆடியோ உரிமை (ரூ.2.75 கோடி), ரிங்டோன் உரிமை (ரூ.1.4 கோடி)... அப்பப்பா... இன்னும் எவ்வளவுதான் சம்பாதித்துத் தருவார் ரஜினி?
பிரமிட் சாய்மிரா கொடுத்த ரூ.65 கோடிதான் எல்லாருக்கும் தெரிகிறது. அதைத் தவிர தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த இன்னுமொரு பெரிய தொகை யாருக்குமே தெரியவில்லை.
இதில் நஷ்டம் என்று ரஜினியை நோக்கி விரல் நீட்டுபவர்களை என்ன செய்யலாம்?
அல்லது நஷ்டக் கணக்குக் காட்டிய தியேட்டர்காரர்களிடம் ரஜினியை மட்டுமே காட்டி தப்பித்துக் கொண்ட குசேலன் தயாரிப்பாளர்களைத்தான் என்ன செய்யலாம்?
