ந்தியாவின் மிகப் பிரமாண்ட படம் எந்திரன். நாட்டில் மிக அதிக பட்ஜெட்டாக 150 கோடி ரூபாயில் தயாராகும் முதல் படம்.... என ஆரம்பித்து தினமும் ஒரு கவர் ஸ்டோரி...

பின்னர் திடீரென்று ஒருநாள், சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய சிக்கல், எந்திரன் ஷூட்டிங் தொடங்குமா? என்றொரு கேள்வி.

அடுத்த நாளே... குசேலன் திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, அதன் விநியோகஸ்தர் பிரமிட் சாய்மிரா கமல்ஹாசனின் மர்மயோகி படத்தை நிறுத்திவிட்டார் (இது பற்றி தனியாகப் பார்ப்போம்!)... இப்படி தினமும் ஒரு பொய்யைப் பரப்பி வந்த விஷமிகள், இப்போது மீண்டும் இப்படி எழுதுகிறார்கள்...

‘எந்திரன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது...!’

ஆரம்பத்திலிருந்தே நாம் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்லி வருகிறோம். ரஜினி தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும், அவர் எல்லோரும் எதிர்பார்ப்பதைச் செய்வதில்லை. எந்தக் கணிப்புக்குள்ளும் அடங்குவதுமல்ல அவர் நடவடிக்கைகள்.

இவர்களாகவே ஒரு காரணத்தைக் கற்பித்து, இவர்களாகவே அதற்கொரு விளக்கத்தையும் கூறி, கடைசியாக இவர்களே ஒரு முடிவுரையையும் எழுதி, ரஜினியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் கடந்த 15 வருடங்களாக மீடியா உலகில் நடந்து வருகிறது.

அது என்ன... எப்போதும் ரஜினியை துதி பாடிக் கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலையா என சிலர் கேட்கக் கூடும்.

நியாயமான கேள்விதான். நாம் அப்படி ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளதை எழுதினால் மட்டும் போதும், எக்ஸ்ட்ராவாக கதை திரைக்கதை வசனமெல்லாம் சேர்ப்பதுதான் நமக்கும் சங்கடம், அவர்களுக்கும் அசிங்கம்.

இன்னொன்று ரஜினி என்ற கலைஞனைப் பற்றி அப்படியெல்லாம் இஷ்டத்துக்கும் எழுதும் உரிமை மீடியா உள்பட யாருக்கும் கிடையாது.

பொதுவாக எல்லோரும் ரஜினியை பத்திரிகைகளுக்கு எதிரானவராகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்திரிகையாளர்களை அவர்களின் தொழில் ரீதியாக பெரிதும் மதிப்பவர் ரஜினி . சொல்லப்போனால் அவரளவுக்கு பத்திரிகையாளர்களை கவுரவமாகவும், கண்ணியத்துடனும் நடத்திய ஒரே விவிஐபி அமரர் எம்ஜிஆர் மட்டும்தான். ஆனால் இருவருக்குமே பத்திரிகைகளுக்கு எதிரானவர்கள் என்ற பட்டம் மட்டும் நிலைத்துவிட்டதுதான் கொடுமை.

தனக்கு எதிராக வந்த ஆதாரமற்ற செய்திகளுக்காக ஒவ்வொரு முறையும் ரஜினி கோர்ட்டை நாடியிருந்தால், இந்நேரம் பத்திரிகையாசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் வாய்தாவுக்காக வக்கீல்களுடன்தான் சுற்றிக் கொண்டிருந்திருப்பார்கள்.

எந்திரன் நின்றுவிட்டது... ஷங்கரிடம் பட்ஜெட் எவ்வளவு என்று எழுதி வாங்கிய பிறகுதான் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கு பணம் தரப்படும் என்றெல்லாம் கதை விட்டார்கள். இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவில் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது என்று கூறி, இன்னும் சில ஜோடனைகளை அந்தக் கதைகளுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த வதந்திகள் குறித்து அய்ங்கரன் நிறுவனம் என்ன சொல்கிறது?

'நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது? படப்பிடிப்பு தள்ளிப்போகும் சூழல் இருந்தால்தானே அதைப் பற்றிப் பேச முடியும்... ஒரு படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்துக்குள் துவங்குவதில் எத்தனையோ விஷயங்கள் குறுக்கிடலாம். அதையெல்லாம் செய்தியாக்கி விடுவதா... அல்லது அவற்றுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதுதான் சரியாகுமா...

எந்திரன் உலகளாவிய படம். இந்திய துணைக் கண்டத்திலிருந்து இதுவரை யாரும் எடுக்க முடியாத, முன்வராத பிரமாண்ட பட்ஜெட் படம். இதன் வீச்சு உலகளாவியது. எனவே இந்தப் படத்தின் ஒவ்வொரு கட்டமும் நன்கு தீர்மானிக்கப்பட்டு, உலகின் மிகச் சிறந்த டெக்னீஷியன்கள் உழைப்பில் உருவாகி வருகிறது. இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் அந்தப் படத்தின் புகழை எந்த வகையிலும் கெடுத்து விடாது, என்றார் அந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு உயர் அதிகாரி (பெயர் போடக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டதால் அவரது
'சீக்ரஸி' காக்கப்படுகிறது).

பொதுவாக எந்த ஒரு பெரிய திட்டத்தையும் துவங்கிய பின் அவ்வப்போது ஏதேனும் பூஜை, பரிகாரம் செய்து கொண்டே இருப்பார்கள். திருஷ்டி கழியுமாம்... அதற்காக.

இந்தியாவே வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் மீது எத்தனை லட்சம் பொறாமைக் கண்களோ... அந்த வகையில் எந்திரனுக்கு முதல் திருஷ்டி கழிந்ததாக எடுத்து கொள்ள வேண்டியதுதான்!

-சங்கநாதன்