நாகேஷ் மறைவு: தலைவர் ரஜினி இரங்கல்!
கொடைக்கானலில் 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. பனியும், பஞ்சு மேகங்களும் சூழ்ந்து படிப்பிடிப்பை நடத்த விடாமல் மூன்று நாட்களாகி விட்டன. நான்காவது நாள் எங்கேயாவது சென்று படப்பிடிப்பை நடத்தி விட வேண்டும் என்ற வேகத்தோடு கொடைக்கானலை விட்டு கீழே இறங்கி ஒரு சிறிய கிராமத்தில் 'ஆசைக்கிளியே' என்ற பாடலை ஒரு சூரிய காந்தி தோட்டத்தில் ஆரம்பித்துவிட்டேன். இரவு நாங்கள் அங்கேயே தங்க ஏற்பாடுகள் இல்லை.
நானும், கேமராமேன் ரங்காவும், என் குழுவினரும் ஒரு தென்னந்தோப்பில், இரவில் தங்கிவிடுவது என்று முடிவெடுத்தோம். அந்த ஊரில் ரஜினி மட்டும் தங்குவதற்காக ஒரு பெரியவரின் வீட்டை ஏற்பாடு செய்திருந்தோம். படப்பிடிப்பு முடிந்து தனக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் சென்று என்னைத் தேடிய ரஜினி, நான் அங்கு தங்குவதில்லை என்றதும், "நான் டைரக்டர் தங்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறேன்" என்று நாங்கள் இருந்த தென்னந்தோப்பிற்கு வந்து (உண்மையைச் சொல்கிறேன்-பக்கத்தில் சுடுகாடு) எங்களோடு தங்கிவிட்டார்.
இதற்குப் பின் ஒரு நாள் என்னிடம் வந்த ரஜினி, "சார் ஒருத்தன் தூங்கறதுக்கு முக்கியமா என்ன வேணும் சார்?" என்று கேட்டதற்கு நான், "நீங்களே சொல்லுங்கள்" என்றேன். "தூக்கம் தான் வேணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
பொதுவாக எந்த ஒரு ஹீரோவையும் நமது கற்பனையில் பலவிதமாக உருவம் போட்டு வைத்திருப்போம். ஒரு படத்தைப் பற்றி சிந்திக்கையில், 'அவர் அப்படி நடித்தால் எப்படி இருக்கும்? எப்படி நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள்' என்று திறமையுள்ள நடிகர்களைப் பற்றி நமக்குள் ஒரு கணிப்பு இருக்கும். அந்த வகையில் 'படிக்காதவன்' படத்தில் ரஜினி அறியாமலேயே அவரை ஈடுபாட்டுடன் நடிக்கச் செய்திருக்கிறேன். குறிப்பாக நடனக் காட்சிகளில் நான் நேரடியாக தலையிடாமல் நடன இயக்குநரிடம், "ரஜினியை ரசிகர்கள் ரசிக்கும்படி நடனமாடச் செய்யுங்கள். ரிஸ்க்காக இருக்குமே கஷ்டப்படுவாரே என்று யோசிக்காமல் கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள். 'இப்படி ஆடினால்தான் நன்றாக இருக்கும்' என்று தயங்காமல் கூறுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு ஒதுங்கி நிற்பேன்.
நடன இயக்குநர் சொன்னபடி ரஜினி நடனமாட சற்று சிரமப்படும்போது என்னைப் பார்த்து, "என்ன சார், தேவைதானா?" என்று கேட்பார். நானும் அவர் கேட்பது போலவே, "ஆமா சார், அப்பத்தான் ரசிகர்கள் கைதட்டுவார்கள்" என்று கூறுவேன். அது அவர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி நன்றாகச் செயல்படுவார்.
'படிக்காதவன்' இந்தியில் வெளிவந்த 'குத்தார்' படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைத்தோம். அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, "ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?" என்று கேட்டார்.
நானும் பிடி கொடுக்காமல், "ஆமா சார், எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்" என்று வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டேன். படமாகிய பின், என் அருகில் இருந்து படம் பார்த்த ரஜினிக்கு 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்" பாடல் காட்சியில் தான் நடித்திருப்பது பற்றி அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு என் தொடையை அழுத்தமாகப் பிடித்தபடி, "ஸ்....சார்! இது நான்தானே?" என்று வியந்து கேட்டார். தியேட்டரில் அந்தப் பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு ரஜினியை மேலும் உற்சாகப்படுத்தியது.
'படிக்காதவன்' படப்பிடிப்பின்போது ஒரு நாள் இடைவேளையில் ரஜினிகாந்த் என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தார். "நான் எடுக்கப் போகும் படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும்" என்பதே அது.
ரஜினியின் வேண்டுகோள் நிறைவேறியதா?