நமது ரசிக நண்பர்கள் பலர் தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்.

ரஜினி ஏற்கெனவே ஸ்ரீராகவேந்திரர் படத்தில் நடித்து, அந்தக் கடவுளாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இப்போதும் கூட ராகவேந்திரர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்துவிட்டு கண்ணீர் மல்க மெய்சிலிர்த்து நிற்பவர்கள் நிறையப் பேர்.

எந்த வேடமாக இருந்தாலும் அத்தனை தத்ரூபமாக தலைவருக்குப் பொருந்திவிடும் அழகைச் சொல்லவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.

இங்கே வெளியாகியுள்ள படத்தை நம்மில் பலர் நிச்சயம் பார்த்திருக்கவே முடியாது.

இந்தத் தோற்றத்தில் அசல் கிருஷ்ண பரமாத்மா போலவே காட்சியளிக்கிறார் அல்லவா நம் தலைவர்...!

இந்தப் படம் எடுக்கப்பட்டது எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகவிருந்த ஒரு திரைப்படத்துக்காக. அழகும், ஸ்டைலும் மிளிரும் இந்த போஸில் ரஜினியைப் பார்த்தபோது ஒருகணம் திகைத்து, பிரமித்து நின்று விட்டாராம் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

இதுகுறித்து நம்மிடம் இப்படிக் கூறுகிறார்:

இந்தப் படத்தைப் பார்த்ததும் என் நினைவுகள் ஒரு இருபது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டன. ரஜினி மாதிரி ஸ்க்ரீன் பிரசன்ஸ் பிரமாதமாக அமையும் நடிகர்கள் வெகு வெகு குறைவு. இந்த விஷயத்தில் ரஜினி ஒரு எம்ஜிஆர்ன்னு சொல்லலாம். செட்டுக்கு வரும் வரை வேறுமாதிரி இருப்பார்கள்... மேக்கப் ரூமுக்குப் போய் வெளியில் வந்தால், இவரா அவர் என அசந்து போய்விடுவோம்.

ரஜினி விஷயத்தில் ஒவ்வொரு காட்சியையும் நான் ரசித்து ரசித்துப் படமாக்கியவன். அவர் கையை உயர்த்தினாலும் எனக்கு அது தனி ஸ்டைலாகத்தான் தெரியும். அவரது நடையை லதா ரஜினி கூட அந்த அளவு ரசித்திருப்பாரா தெரியாது... நான் அப்படி ரசித்து ரசித்து அவரைப் படம் பிடித்தவன்.

ஒரு படத்துக்காக கிருஷ்ண பரமாத்மா வேடம்... அதை ரஜினிக்கு சும்மா போட்டுப் பார்த்தேன்... அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்த்து போன்ற ஒரு பிரமிப்பு எனக்கு.

கண்களில் அந்த வசீகரமும் பார்ப்பவரை மெய் மறக்கச் செய்யும் மெல்லிய புன்னகையும், அவர் நின்ற கோலமும் எனக்கு மகாபாரதக் கண்ணனையே பார்த்த சிலிர்ப்பைத் தந்தன. எனக்கு மட்டுமல்ல... என்னோடு இருந்து இந்தக் காட்சியைப் பார்த்த ஏவிஎம் அதிபர் சரவணன் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டனர்.

ரஜினி ஒரு கிருஷ்ண பரமாத்மாதான். இந்தத் திரையுலகையே காக்க வந்த ஆபத்பாந்தவன் அவர்..., என பேசிக் கொண்டே போனார் முத்துராமன்.

எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் பேச்சைக் குறைத்துக் கொள்வார் முத்துராமன். ஆனால் ரஜினி விஷயம் என்றால் அவரால் பேச்சைக் குறைக்கவே முடியாது.... அதுதான் தலைவரின் பெருமை!

சரி... படத்தைப் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை... நமது ‘கலியுக கண்ணனின்’ இந்த அரிய படத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுங்கள்!

-சங்கநாதன்