ஆஷ்ரம் விழாவில் ரஜினியின் கலகல பேச்சு!
திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் சீரிய முறையில் செயல்படும் ஆஸ்ரம் பள்ளி மற்றும் கல்வி அமைப்பின் ஆண்டு விழாவில் நமது தலைவர் பங்கேற்றுப் பேசியதன் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
சரோஜாதேவியுடன் நடிக்க முடியவில்லையே! - ரஜினி
சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.
விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:
சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் என்னை நெருங்க விட்டு இருக்க மாட்டார்கள்.
சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் சிம்பு, நகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு: எஸ்.சங்கர்



