சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
உடல் நலக்குறைவு காரணமாக அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் மன்றப் பணிகளை ரஜினியின் நண்பர் சுதாகர் கவனிக்கிறார் என ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மன்றப் பொறுப்புகளிலிருந்து சத்தியநாராயணா நீக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தலைவர் ரஜினியிடமிருந்து முறையான எந்த அறிவிப்போ அறிக்கையோ வெளிவராத நிலையில் இதுபற்றி எதுவும் பேசுவது சரியில்லை. அதிகாரப்பூர்வமற்ற எந்த செய்தியையும் நம்பாதீர்கள் என்றும் அறிவித்துள்ளனர்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக சத்தியநாராயணா அவதிப்பட்டு வருவதாலும், அண்மையில் அவரின் தாயார் காலமானதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாலும் கொஞ்ச நாளைக்கு மன்றப் பணிகளிலிருந்து அவரை விடுவித்திருப்பதாக ரஜினியே சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
அதையே இப்போது பெரிய அளவில் செய்தியாக்கி விட்டது மீடியா. எனவே தலைமை மன்றத்திலிருந்து ரஜினியின் முறையான அறிவிப்பு வரும் வரை இந்த விஷயம் பற்றி ரசிகர்கள் அலட்டிக் கொள்ளாமலிருப்பதே நல்லது!
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப முக்கிய நிர்வாகி நம்மிடம் கூறியதாவது:
சுதாகர் சாரை மன்றத் தலைவராகவோ அல்லது வேறு என்தப் பொறுப்புக்கோ தலைவர் கொண்டு வந்துவிடவில்லை. இது ஏற்கெனவே பேசி வைத்த முடிவுதான். சத்தி உண்மையிலேயே ரெஸ்டில் இருக்கிறார். மண்டபத்துக்கு வரும் செய்திகள் மற்றும் தகவல்களை முறையாக தலைவரிடம் கொண்டுபோய் சேர்ப்பது இப்போது சுதாகர்தான். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அப்படி ஏதாவது நடந்தால் நம்ம தலைவர் அதை ரகசியமாகச் செய்பவரல்ல...” என்றார்.
இதுகுறித்து சத்தியநாராயணாவின் கருத்து விரைவில் வெளியிடப்படும்.
-சங்கநாதன்