திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கே. பாக்யராஜின் மறைவு செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது எக்ஸ் தளத்தில், “எனது இனிய நண்பரும், அற்புதமான மனிதருமான கே. பாக்யராஜின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது” என்று இரங்கல் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக தமிழ் திரையுலகில் பயணித்த ரஜினிகாந்த் மற்றும் கே. பாக்யராஜ் இணைந்து பகிர்ந்த சில மறக்க முடியாத தருணங்கள்…
‘16 வயதினிலே’ படத்தில் தொடங்கிய அறிமுகம்
இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கே. பாக்யராஜ், '16 வயதினிலே' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தமிழ் வசன உச்சரிப்பில் ரஜினிகாந்துக்கு உதவியதாக பலமுறை கூறப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பே இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்பின் தொடக்கமாக அமைந்தது.
‘நான் சிவப்பு மனிதன்’ - ரஜினியின் வற்புறுத்தல்
1985-ல் வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கே. பாக்யராஜ்.
பின்னாளில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “இந்தக் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும். ரஜினியை விட என் கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றுவிடுமோ என்ற தயக்கத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. ஆனால், ‘இந்த வேடத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ என்று ரஜினி வற்புறுத்திய பிறகே ஒப்புக்கொண்டேன்” என்று நினைவுகூர்ந்தார்.
‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் சிறப்பு தோற்றம்
1984-ஆம் ஆண்டு வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் கே. பாக்யராஜ் சிறப்பு நகைச்சுவை தோற்றத்தில் நடித்திருந்தார். ரசிகர்களால் ரசிக்கப்பட்ட அந்தக் காட்சி, இருவரும் இணைந்த அரிய திரைநினைவுகளில் ஒன்றாகும்.
‘பாரிஜாதம்’ இசை வெளியீட்டு விழா
கே. பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த், மேடையில் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
அப்போது, பொருளாதார சிரமத்தில் இருந்த காலத்தில் ‘வேட்டிய மடிச்சு கட்டு’ திரைப்படத்திற்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாக்யராஜ் அழைத்ததாகவும், ஆனால் அப்போது ஏற்பட்ட சூழ்நிலையால் தன்னால் நடிக்க முடியாமல் போனது இன்றளவும் வருத்தமாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசினார்.
அதே விழாவில், மறுநாள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதால், மேடையிலேயே ஒரு நாள் முன்னதாக கேக் வெட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் கே. பாக்யராஜ். அந்த தருணம் ரசிகர்களின் கரவொலிக்கிடையே நடைபெற்றது.
50 ஆண்டு திரைப்பயண விழா
கே. பாக்யராஜின் 50 ஆண்டு திரைப்பயண விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், அவரது எழுத்தாற்றல், திரைக்கதை அமைக்கும் திறன் மற்றும் சாதனைகளை மனதார பாராட்டினார். “பாக்யராஜ் போன்ற திரைக்கதை எழுத்தாளர்கள் அரிது” என்று அவர் குறிப்பிட்டது, அவரது திறமையின் மீது ரஜினி வைத்திருந்த உயர்ந்த மதிப்பை வெளிப்படுத்தியது.
கே. பாக்யராஜ் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் படைத்த திரைப்படங்களும், ரஜினிகாந்துடன் இணைந்து உருவாக்கிய இந்த அரிய திரைநினைவுகளும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.