Rajinikanth Doordarshan National TV Interview In 1995

Rajinikanth Doordarshan TV Interview 1995

12 December 1995

1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...

1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை

ரஜினி: என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்

ரஜினி: இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இந்தியா பேசப்படுகிற அளவுக்கு கொண்டு வந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.

3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்

ரஜினி: மூன்று பேர். ஞானி, குழந்தை, பைத்தியக்காரன். ஞானி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.

4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்

ரஜினி: நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.

5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்

ரஜினி: என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்.

6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை

ரஜினி: கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.

7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்

ரஜினி: உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.

8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்

ரஜினி: இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!

9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா

ரஜினி: பாருங்க... நான் அங்க சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநலம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாதையை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்

ரஜினி: அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.

11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை

ரஜினி: சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.

12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை

ரஜினி: இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள். தாமஸ், திருவனந்தபுரம்

ரஜினி: தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழங்கிய ரெபெல் பொயட் பாரதியார். பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி. உண்மையான படிக்காத மேதை காமராஜர். மாபெரும் தலைவர் அண்ணா. எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி

ரஜினி: (சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? சரவணன், திருச்சி

ரஜினி: ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? பி. சாந்தா, மதுரை

ரஜினி: தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போட்டால் எவ்வளவு இருக்கும்? கோவிந்தன், வேலூர்

ரஜினி: 70 கிலோ.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? ஆன்ந்த், கடலுர்

ரஜினி: சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? செல்வம், திண்டிவனம்

ரஜினி: வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? வேதவல்லி, திருவல்லிக்கேணி

ரஜினி: அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா? பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்

ரஜினி: செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி ராம் மணி, ராஜபாளையம்

ரஜினி: காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? சி. தெ. ரஜினி அருள், மணக்காடு

ரஜினி: இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்? கே. தேவி, பூநகரம்

ரஜினி: எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்? என். சுப்ரமணியன், கல்கத்தா

ரஜினி: என்னை நான் நாடிச் செல்கிறேன்.

26. ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்? ஆர். கவுஸ், நாகூர்

ரஜினி: பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ట். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை.

27. தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே.. அதை கட்டுப்படுத்துவது எப்படி? ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை

ரஜினி: இந்தக்கேள்வியை நிறையப் பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை டிரை பண்றாங்க. அது கட்டுப்படுத்த முடியாது. அதற்கப்புறம் கட்டுப்படுத்த முடியாமல் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துடுது. அது தேவையேயில்லை. அதைப்பற்றி கவலைப்படாதீங்க. காலையில் எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அங்கு உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் நீங்க பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டும். எது பின்னால போகட்டும். யாரு பின்னால போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க.அப்புறம் எழுந்திடுங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அப்படியே வந்து மனசு உங்க கண்ட்ரோல்ல வரும். அப்ப வந்து உங்க இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பற்றி கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும். இது எப்படின்னு சொன்னா, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதான் புதுசா போட முடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அது வந்து இயற்கை. அதைப்பற்றி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க.

28. ஒரு பத்திரிக்கையிலும் டிவியிலும் உங்களைப் பற்றி ஒரு நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளாரே.. அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க... ரத்தம் கொதிக்குது தலைவா! லக்மான் கஜினி, திருச்சி

ரஜினி: கண்ணா... இது ஜனநாயக நாடு. அவுங்கவுங் கருத்தைச் சொல்ல எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு. பைதபை நான் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

29. பாம்பு என்றால் படையும் நடுங்கும். நீங்க எப்படி பாம்பு கூட நடிக்கிறீங்க? மூர்த்தி, சமயபுரம்

ரஜினி: உண்மையில பாம்புன்னா எனக்கு ரொம்ப பயங்க. என்ன பண்றது படத்தில பார்த்தீங்கன்னா பாம்பை கையில பிடிச்சிக்கிறது, உடம்பு மேல போட்டுக்கிறது. இந்த மாதிரியே வருது. நான் கூட வாங்குற பணத்தை நினைச்சுக்கிட்டு செஞ்சுடறது.

30. உங்களுடைய ரசிகர்களில் நிறைய குழந்தைகளும் இருக்காங்க. அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க? சரோஜா, அரக்கோணம்

ரஜினி: குழந்தைங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. டி.வி பார்க்கிறதை கொஞ்சம் கம்பி பண்ணிக்கோங்க. நிறைய விளையாடுங்க. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்.

31. ஆரம்பகால ரஜினி முன்கோபக்காரர், இப்போதைய ரஜினி? ரஜினி முருகன், திருச்செந்துர்

ரஜினி: ஒரே ரஜினி, அதே ரஜினிதான்.

32. சமீபத்தில் நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை கூறுங்கள் ஜி. வாசுதேவன், கோவை

ரஜினி: பாட்ஷா வெற்றி விழா பங்க்ஷனுங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத நிகழ்ச்சிங்க.

33. உன் பிறந்தநாளன்று மிகவும் பவர் உள்ள வெடிகுண்டு வைத்து உன்னை கொல்லப் போகிறேன். சின்னப்பயலான உன்னைக் கொல்ல எனக்கே மனசு கஷ்டமாக இருந்தாலும் உன் தொல்லை தாங்கமுடியவில்லை. மொட்டைக்கடிதம்

ரஜினி: உங்க மனசாட்சியை கேட்டுப்பாருங்க. நீங்க கும்பிடற ஆண்டவனை கேட்டுப்பாருங்க. ரெண்டுபேருமே சரின்னு சொன்னா கோ அஹெட். என்னிக்கோ ஒரு நாளைக்குப் போக வேண்டியதுதானே. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்.

34. பல அரசியல் கட்சியை சேர்ந்தவங்க உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்து? ரஜினி கார்த்திக், திருவாரூர்

ரஜினி: உண்மைதான். இப்ப நடக்கிற அரசியல் எனக்குத் தெரியாது. இவங்க நடத்துற அரசியல் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அரசியல் எல்லாம், அரசியல் என்பது பொதுநலம். சுயநலவாதிங்க பொதுநலத்திற்கு வரக்கூடாது. சுயநினைப்பு உள்ளவங்கள பொதுநலத்திற்கு இழுக்கக்கூடாது. ஏழையை ஏழையா இருக்கவிடக்கூடாது. சிலர் வாழ பலரை தாழ விடக்கூடாது.

35. வெடிகுண்டு தமிழ்நாட்டுல வெடிக்கிறது மட்டும்தான் உங்க காதுல கேட்குதா? பிற மாநிலங்கள்ல வெடிக்கிறது உங்க காதுல கேட்கலையா? அதுக்கு குரல் கொடுக்காத நீங்க இதுக்கு மட்டும் குரல் கொடுக்க என்ன காரணம்? தமிழ் மணி, கரூர்

ரஜினி: முதல்ல நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அதுக்கப்புறம் வேற வீட்டை பார்ப்போம்.

36. உங்களுக்கும் பிரதமருககும் நடந்த சந்திப்பு பற்றி ரமணி, அண்ணாநகர்

ரஜினி: அதுபற்றி இப்ப எதுவும் சொல்ல விரும்பலை. That's not a courtesy one. It has some significance. நேரம் வரும்போது நானே சொல்றேன்.

37. தலைவா, நீங்க ஏதோ அரசியல் கட்சில சேர்ற மாதிரி பேச்சு அடிபடுதே.. இது எல்லாம் என்ன தலைவரே? சதாசிவம், டால்மியாபுரம்

ரஜினி: கண்ணா, நான் எந்தக் கட்சியிலேயும் சேரலை. சேரவும் மாட்டேன். கவலையே படாதீங்க. அப்படியே வந்தா தனிக்கட்சிதான்.

38. இலங்கையில் நடக்கும் சம்பவம் பற்றி வீரபத்திரன், பட்டுக்கேர்ட்டை

ரஜினி: இதுக்கு உடனடியா ஒரு முற்றுப்புள்ளி வெச்சுத்தான் ஆகணும். அப்பாவி மக்கள் சாகறதை பற்றி நான் ரொம்ப வேதனைப்படறேன். கடுமையாக கண்டிக்கிறேன்.

தொடரும்....

தொகுப்பு: ஜெ. ராம்கி

Watch Historical Rajinikanth Interview in Doordarshan TV (1995)