5 November 2008
இதுதான் நம் அன்புத் தலைவர், தொண்டர்களாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குச் சொல்லும் புதிய கீதை!
ஆம், இன்று தலைவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்டவாரியாக சந்தித்தார்.
காலை 7 மணியிலிருந்தே ராகவேந்திரா கல்யாண மண்டபம், பத்துக் கல்யாணங்களை ஒன்றாகச் செய்யும்போது ஏற்படும் அமர்க்களத்துடன் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
கடுமையான போலீஸ் பாதுகாப்பு, தளபதி சத்தி மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகளின் சோதனைகளுக்குப் பிறகே, ஒவ்வொரு ரசிகர் மன்ற நிர்வாகியும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்துக்கு 10 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் பிரதான மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்ட வாரியாக தளபதி சத்தியநாராயணா, நிர்வாகிகளை அழைத்து தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களுடன் ரஜினி உரையாடுவதாக ஏற்பாடு.
சந்திப்பு நடைபெறும் மேடையில் ஒரே ஒரு நாற்காலி. அதன் பின்னணியில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியம்தான் இந்த சந்திப்பின் ஹைலைட். தலைவர் ரஜினி சொல்ல வரும் ஒட்டுமொத்த செய்திக்கும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாக்கியம் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளது.
"கடமையைச் செய்; பலனை எதிர் பார்!" இதுதான் அந்த வாக்கியம். அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹாவதார் பாபாஜியின் படம். சும்மா அதிருதுல்ல!
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த ரசிகர்களும் கேள்விகேட்க அனுமதிக்கப்பட்டனர்.
தங்கள் கேள்விகளை அவர்கள் பதில்களாக எழுதி சுதாகரிடம் தர, அவற்றுக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக தன் பதில்களைத் தந்தார் சூப்பர் ஸ்டார்.
தன்னை விமர்சிக்கும் கேள்விக்கும் நிதானமாக சிரித்தபடி அவர் பதில் கூறிய விதம் தலைவரின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அரசியல் பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் நச்சென்று இருந்தது. உண்மையில் இன்று நாட்டுக்குத் தேவை இப்படியொரு மாமனிதர்தான் என்ற எண்ணத்தை ஒவ்வொரு ரசிகர் மனதிலும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன தலைவரின் பதில்கள்.
இனி ரஜினியிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?
ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இதுதான் நோக்கம். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.
கேள்வி: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா?
ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.
கேள்வி: எதிர்காலம் திட்டம் என்ன?
ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர்காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.
கேள்வி: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?
ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.
'கிருஷ்ணகிரி தமிழன்' ரஜினி!
கேள்வி: எந்திரன் படம் எப்படி இருக்கும்?
பதில்: உலகின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக, இந்தியாவின் தலைசிறந்த படமாக இருக்கும்.
கேள்வி: உங்கள் பூர்வீக மாவட்டம் கிருஷ்ணகிரியில் உங்கள் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைப்பீர்களா?
ரஜினி: (இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் ரசிகர்களை புன்முபறுவலுடன் பார்த்த ரஜினி, இந்தக் கேள்வியைக் கேட்ட ரசிகர் யார் எனக் கேட்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர் எழுந்து கைத் தூக்கினார். அவரைப் பாராட்டினார் ரஜினி) நல்ல விஷயத்தைக் கூறினீர்கள். அது பற்றி யோசிப்பேன்.
கேள்வி: குசேலன் தோல்வி ஏன்? படத்துக்கு நீங்கள் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுகிறார்களே?
பதில்: அந்தப் பட பூஜையின்போதே அதில் என் பங்கு என்ன என்று கூறிவிட்டேன். இயக்குநர் வாசுதான் என் போர்ஷனை அதிகப்படுத்தார். தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம், நாமே ரிலீஸ் பண்ணலாம் என்றேன். கேட்கவில்லை, கொடுத்துவிட்டார்கள். ரூ.60 கோடிக்கு விற்காதீர்கள் என்றேன். அதையும் மீறி விற்றார்கள். இதில் என் தப்பு என்ன? இந்தப் படத்துக்கு நான் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுவதும் தவறு.