April 11, 2004
அதிக எதிர்பார்ப்புகளும் பரபரப்பும் நிலவிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை காலை, தனது ஓட்டை என்.டி.ஏ. கூட்டணிக்கு அளிப்பதாக அறிவித்தார். ஆனால், தனது ரசிகர்களை அந்த கூட்டணிக்கு வாக்களிக்க அழைக்காமல், அவர்கள் தங்களது சொந்த முடிவை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
“இது எந்த கூட்டணிக்கும் நான் அளிக்கும் ஆதரவு அல்ல என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். எந்த அரசியல் கட்சிக்கும் என் ஆதரவு இல்லை. இது என் தனிப்பட்ட ஓட்டு மட்டும் — வாஜ்பாய் தலைமையிலான கூட்டணிக்கே,” என்று ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தனது முடிவை விளக்கும்போது, அவர் தயாரித்து வந்த அறிக்கையிலிருந்து வாசித்தார்:
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும் வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாக பேசியிருக்கிறேனா?
பாபா படத்தில் நான் சிகரெட் பிடிக்கிறதும், மது அருந்துவதும் இளைஞர்களை கெடுத்து விடும் என்ற குற்றச்சாட்டை கூறி, அந்த பட வெளியீட்டன்று படச்சுருளை கடத்தி, தியேட்டர் திரையை கிழித்து தியேட்டர் மேனேஜரை கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளை கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.
வன்னிய சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். டாக்டர் ராமதாஸ் என்னை விட வயதில் மூத்தவர், என்னை விட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. வெறும் தொலைபேசியிலாவது, "தம்பி இந்த மாதிரியான சீன்களை எல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களை கெடுக்கும்" என்று சொல்லியிருந்தால் நிச்சயமாக நான் அந்த காட்சிகளை நீக்குவதைப் பற்றி சிந்தித்து இருப்பேன். முடிந்தால் அந்த காட்சிகளை நீக்கி இருப்பேன். முடியவில்லை என்றால் இது போன்ற காட்சிகளை அடுத்த படத்தில் தவிர்த்து இருப்பேன்.
அல்லது "இது போன்ற காட்சிகளை திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களை கெடுத்து விடும்" என்று சினிமா தணிக்கை குழுவிடம் இது போன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம். ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித்தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதை செய்யாமல் கோடான கோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டு மிராண்டித்தனமான நாசவேலைகளில் ஈடுபடுவது சரிதானா?
அது மட்டுமின்றி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று சொல்லி என்னுடைய ரசிகர் மன்ற பலகைகளை உடைத்துத் தள்ளி, ரசிகர்களின் நெற்றியில் "முட்டாள்" என்று எழுதிக்கொள்ளும்படி சொன்னார்கள். என் ரசிகர்கள் ஆவேசமடைந்தார்கள், நானும் பொறுமை காக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டேன், நானும் அமைதியாகத்தான் இருந்தேன்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் என்னை "சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி" என்று மிகக் கேவலமாக டாக்டர் ராமதாஸ் விமர்சித்தார். என் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டு கொந்தளித்தார்கள். "எங்கள் எதிர்ப்பை காட்டியே தீருவோம்" என்று ஒரு குரலாக அவர்களுடைய உணர்ச்சிகளை கொட்டினார்கள்.
அவர்களுடைய உணர்வுகளில் நியாயம் இருப்பதினால் அதை மதித்து பா.ம.க. போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜன நாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்க சொன்னேன், அவர்கள் செயல்பட தொடங்கியவுடன் அந்த ஆறு தொகுதிகளில் இருக்கும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் என் ரசிகர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அடியாட்களிடம் இருந்து தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்தன.
காவல் துறையினர் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் என் ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. ஆகையால் அந்த ஆறு தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அதி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வெளிப்படையான ஆதரவு என் மன்றங்கள் அளித்தால் அவர்கள் என் ரசிகர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அதனால் வெளிப்படையான என் மன்ற ஆதரவை அதி.மு.க, பா.ஜ.க. விற்கு அளிக்கும்படி என் மன்றங்களுக்கு ஒப்புதல் அளித்தேன். எனக்கு டாக்டர் ராமதாஸை எதிர்ப்பதைவிட என் ரசிகர்களின் நலனும், உயிரும் பாதுகாப்பும் தான் முக்கியம்.
இத்தருணத்தில் மதுரையில் என் ரசிகர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடத்திய ராட்சஸ தாக்குதல்களை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலமும், செய்தித்தாள்கள் மூலமும் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவத்திற்காக டாக்டர் ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த தமிழக காவல் துறையினருக்கும், தமிழக அரசிற்கும் என் மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிலிருந்து நாம் அவர்களை விடப்போவதில்லை.
அரசியலில் எனக்கு பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல். இரண்டாவது வன்முறை, டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.
நான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்த பழி வாங்கும் உணர்ச்சி? என்று சிலர் கேட்கிறார்கள்.
நான் ஆன்மீகவாதிதான். ஆனால் ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தை காட்டும் அளவிற்கு ஆன்மீகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மீகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.
நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்த தவறை நான் ஆயிரம் முறை செய்வேன்.
என்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களே உங்க பலம் என்னவென்று டாக்டர் ராமதாசுக்கு புரிய வைத்து விட்டீர்கள், போதும், இனி மேல் கருப்புக்கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜன நாயக ரீதியில் இனி ஓட்டுப்போடுவதில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம், தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம், அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றாவிட்டால் நாம் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமா எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டோம்.
டாக்டர் ராமதாஸ் அவர்களே மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்கு கருப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டில்லி, கொல்கத்தா, மலேசியா, சிங்கப்புர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கருப்புக்கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்? அங்கேயும் அடியாட்களை கட்டிக்கிட்டு போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா? வேண்டாம் இந்த வெறிச் செயல்கள்.
டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்களைப் பற்றி கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை.
இப்பொழுது முக்கியமான கட்டத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்ற தேர்தலாகட்டும் அல்லது சட்டமன்ற தேர்தலாகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்கு- அதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது. நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை.
ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இதுதான் ஒரே வழி. குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்கா விட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலெல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்து வரும் எந்த ஜீவநதியும் இல்லை.
நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே.
மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த வருடமாக இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது. ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.
என்னை பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப்பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு.
நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். அத்வானி அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள்.
வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.
தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அன்று. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன்.
நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலேயே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று சுட்டியாய் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்-உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.
ஆனால்... சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவ, மாணவிகளே, படித்தவர்களே நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டு போட போறிங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டு போட போறிங்களா, இல்லை தண்ணீர் வேணும்னு ஓட்டு போட போறிங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், சிந்தியுங்கள், செயல்படுங்கள்.
வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு
நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!!
ஜெய்ஹிந்த்.