"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகப்பெரும் சாதனையாளர். இத்தனை உயரத்துக்குப்போன பிறகும், கடுமையாக உழைக்கத் தயங்காதவர். இப்போதுகூட, நடிப்பதற்கு கேமரா முன் நிற்க வருவதற்குள், 4 தடவையாவது வசனம் பேசி நடித்துப் பார்ப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி "ஜக்குபாய்'' படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்த நேரத்தில், திடீரென ஒரு நாள் எனக்கு ரஜினியிடம் இருந்து போன் வந்தது. அவருக்கே உரிய வேகக் குரலில், "சேகர்! நீங்கள் `ஜக்குபாய்' படத்தில் நடிக்கிறீர்கள். உங்களுக்கு முக்கிய ரோல்'' என்றார். நான் அவரிடம், "ரொம்ப சந்தோஷம். நடிக்கிறேன் சார். ஆனால், ஹீரோயின் அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள்'' என்றேன், சிரித்துக்கொண்டே. அவரும் எனது நகைச்சுவையை ரசித்து சிரித்தார். ஜக்குபாய் படம் தொடர முடியாது போனதில், எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு நழுவிப்போய்விட்டது. ரஜினி, சத்யராஜ் நடித்த "மிஸ்டர் பாரத்'' படம், "திரிசூல்'' என்ற இந்திப்படத்தின் ரீமேக், எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். கதை-வசனம் விசு. விசு என்னிடம், "டேய்! இந்தப் படத்தில் உனக்கொரு வேஷம் கொடுத்திருக்கிறேன். ரஜினி, சத்யராஜ் என்று பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். அதனால், உன் வேஷம் பெரிசாக வரும் என்று எதிர்பார்க்காதே'' என்றார். அவர் சொன்னதுபோலவே என் போர்ஷன் குறைவாகத்தான் இருந்தது. அந்தப் படத்தில் நான் நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்த விசுவின் அந்தப் பெருந்தன்மைக்கு முன்பாக, `சின்ன வேடம்' என்பது எனக்கு பெரிதாகப்படவில்லை.