"சந்திரமுகி'', "முத்து'', "வள்ளி'' ஆகிய படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த வடிவேலு கூறியதாவது:- "என்னை வளர்த்துவிட்ட மவராசன்கள்ல ரஜினி சாரும் ஒருத்தர். மதுரையில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ராஜ்கிரண் சார் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து அறிமுகப்படுத்தினார். அந்த இரு படங்கள் வெளிவந்ததும் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு வருமானமோ, நகைச்சுவை நடிகன் என்ற அந்தஸ்தோ கிடைக்கவில்லை. அப்படி இருந்த என்னை ரஜினி சார்தான் கை தூக்கிவிட்டார். "வள்ளி'' படத்திற்கு என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவர் மட்டும் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் என் வளர்ச்சி கேள்விக்குறியாகி இருக்கும். "வள்ளி''யில் என்னை அவர் நடிக்க வைத்த பிறகுதான் திரையுலகின் பார்வை என் மீது திரும்பியது. நிறைய படங்களும் என்னைத் தேடி வர ஆரம்பித்தன. அதற்காக ரஜினி சாருக்கு அன்றும் இன்றும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மதுரையில் இருந்தபோது தீவிர சினிமா பைத்தியமாக இருந்தேன். ஒரு படத்தைக்கூட மிஸ் பண்ணமாட்டேன். பகல் முழுக்க கண்ணாடி கடையில் வேலை பார்த்துவிட்டு, ராத்திரியானால் சினிமாவுக்குப் போய்விடுவேன். அதிலும் ரஜினி சார் படம் என்றால் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. அந்தளவுக்கு ரஜினி சார் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். திரையில் பார்த்து வியந்த ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்த்தது இல்லை. அதனாலோ என்னவோ வள்ளி படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து, கேமரா முன் நின்றபோதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது. முதல் நாள் ரஜினி சாரை பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சினிமாவில் ஜாலியாக நடிக்கும் அவர் நேரில் ரொம்ப சீரியசாக இருந்தார். அதனால் அவர் நம்மிடம் பேசுவாரோ என்னவோ என்ற அச்சத்துடன் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அதைக் கவனித்த ரஜினி சார் என்னைக் கூப்பிட்டு அவர் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, என்னைப் பற்றியும் என் குடும்பப் பின்னணி பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் நடித்த படங்களை எல்லாம் பார்த்ததாகவும், என் நடிப்பு வித்தியாசமாக இருப்பதாகவும் பாராட்டினார். அதோடு `சினிமாவில் நீடித்து நிற்க வேண்டும் என்றால் நம்முடைய குணம் நல்ல மாதிரி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கினார். இந்த நிமிஷம் வரைக்கும் சினிமாவில் எதையும் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. ரஜினி சாரின் அன்பைப் பெற்றது மட்டுமே என் சாதனை!'' இவ்வாறு வடிவேலு கூறினார்.