Nayanthara

30 October 2008

Rajinikanth nayanthara
தென்னிந்திய நடிகைகளின் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்பவர் நயன்தாரா. குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 3 படங்களில் (சிவாஜியையும் சேர்த்து!) நடித்து விட்டவர். ரஜினி எனும் மாமனிதர் எப்படியெல்லாம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனைகளுக்கு காரணமாக அமைந்தார் என பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் ரஜினியிடமிருந்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்: தலைவரிடம் நான் நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அவர் எந்த அட்வைஸையும் எனக்குச் சொல்லல. ஆனா அவரோட நடவடிக்கைகளிலிருந்து இதை நான் கத்துக்கிட்டேன். நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை! இப்போதெல்லாம் நட்சத்திரங்களுக்கு கேரவன் எனப்படும் சொகுசு வேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அவசியமா இருக்கு. சில சமயம், அவசியம் என்பதை விட கவுரவ பிரச்சினையாவும் ஆயிடுச்சு! முன்னெல்லாம் ஒரு ஷாட் ஓகே ஆனதும் நான் ஓடிப்போய் கேரவனில் உட்கார்ந்துக்குவேன். அடுத்த ஷாட் ரெடியானதும், அஸிஸ்டெண்ட் கூப்பிடுவார். போய் நடித்துவிட்டு மறுபடியும் கேரவனுக்குள் ஏறிடுவேன். ஆனால் சூப்பர் ஸ்டாராக இருந்தும் ரஜினி சார் அப்படிச் செய்ய மாட்டார். சிவாஜி, குசேலன் படப்பிடிப்புகளின்போது தலைவரின் எளிமையைப் பார்த்து வியப்பாக இருந்தது. அதோடு அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அவரது டெடிகேஷன் என்பதும் கண்கூடாக என்னால் உணர முடிந்தது. அவருக்கான ஷாட் முடிந்துவிட்டாலும் கூட சேரைப் போட்டுக் கொண்டு செட்டிலேயே உட்கார்ந்திருப்பார், அடுத்த ஷாட்டுக்கு அழைக்கும் வரை அப்படியே உட்கார்ந்திருப்பார். டைரக்டர் வந்து, சார் அடுத்த ஷாட் ரெடியாக அரைமணி நேரமாகும்... நீங்க ரெஸ்ட் எடுக்கலாமே, என்று சொன்னால்தான் கேரவனுக்குள் போவார். பொசுக்கு பொசுக்குன்னு கேரவனுக்குள் போகிற எனக்கு ரஜினி சாரின் செய்கை ஆச்சர்யமாகவே இருந்தது. கூடவே, தலைவர் எளிமையா இருக்கிற மாதிரி பந்தா விடுறாரோன்னு நெனச்சேன்! ஒரு நாள் படப்பிடிப்பின்போது சொன்னார்... ‘நடிப்புதான் நமக்கு சோறு போடுது. நடிப்பும் தொழில்தான். அதை சின்ஸியரா செய்யணும். ஒரு ஆபீஸ் வேலைக்குப் போறவன் ஒரு ஃபைலை புரட்டி கையெழுத்துப் போட்டதும் உடனே ரெஸ்ட் ரூமுக்கு ஓடிப்போய் உட்கார்ந்துட முடியுமா? காலை 9 மணியிலிருந்து 1 மணி வரைக்கும், 2 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் ஒரு கால்ஷீட். இந்த கால்ஷீட் நேரம் நம்ம சொந்த நேரம் கிடையாது. நாம காசு வாங்கிட்டு, இந்த நேரத்தை அவங்களுக்குக் கொடுத்திட்டோம். அதனால அந்த நேரங்கள்ல அவங்க சவுகரியப்படிதான் நாம இருக்கணும், இதான் என் பாலிஸி,’ எனச் சொன்னார். எவ்வளவு பெரிய விஷயத்தை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்! அன்றிலிருந்து தலைவர் பாணியில் செட்டிலேயே உட்கார்ந்துவிடுவேன். அன்றிலிருந்து அத்யாவசியம் என்றாலோ... அவர்களே ரெஸ்ட் எடுக்கச் சொன்னாலோ தவிர கேரவனுக்குள் போவதே இல்லை. இந்த விஷயத்தில் என் வழி... தலைவர் வழி!!