S.P. Muthuraman (Director)

புவனா ஒரு கேள்விக்குறி

"ரஜினிகாந்தை நல்லவராக நடிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

"என் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் "புவனா ஒரு கேள்விக்குறி.''

வில்லன் வேடத்திலும், ஸ்டைல் நடிப்பிலும் அவர் ஏற்கனவே முத்திரை பதித்திருந்தார். அவரை, புதுமையான வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்.

இந்தப்படத்தில் 2 கதாநாயகர்கள். அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமாரை கெட்டவராகவும், கெட்டவராகவே நடித்து வந்த ரஜினிகாந்தை நல்லவராகவும் நடிக்க வைக்கத் தீர்மானித்தோம்.

இதுபற்றி அறிந்ததும், `ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஏற்பார்களா?' என்று சிவகுமார் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிறகு, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று, மிகச்சிறப்பாக நடித்தார்.

புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ரஜினிக்கு ஏக மகிழ்ச்சி. அற்புதமாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்.

இந்தப்படம் வெளியாகும் வரை, சிறந்த வில்லனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் மட்டுமே ரஜினியை ரசிகர்கள் நினைத்தார்கள். அவர் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இப்படம், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது."

ஆறிலிருந்து அறுபது வரை

ரஜினி, ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும், அது பற்றிய முழு விவரத்தையும் கேட்டறிந்து, கதையை உள்வாங்கிக்கொண்டு, தான் நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து ஜீரணித்துக்கொண்டு நடிப்பார்.

"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா?" என்று கேட்டார்.

"பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்" என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும், ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.

இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டுவது, அது அவருக்குப் பிடித்திருந்தால் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்குவது, இல்லாவிட்டால் கதையின் போக்கை மாற்றுவது - இதுதான் பஞ்சு அருணாசலத்தின் முடிவு.

இதை ரஜினியிடம் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டார்.

அதன்படி, 5 ஆயிரம் அடி வரை படம் எடுத்தோம். எடிட் செய்து, ரஜினிக்குப் போட்டுக்காட்டினோம்.

அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. "படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. படத்தை இதே மாதிரி தொடருங்கள்" என்றார்.

அதேபோல் படத்தை எடுத்து முடித்தோம்.

விநியோகஸ்தர்களிடம், "படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். திங்கட்கிழமை வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்றோம்.

நாங்கள் எண்ணியபடி திங்கட்கிழமை முதல், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.

படம் பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது."

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

நெற்றிக்கண்

ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "நெற்றிக்கண்'', ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

"கவிதாலயா'' பேனரில் டைரக்டர் கே.பாலசந்தர் தயாரித்த படம் இது.

பொதுவாக, பாலசந்தர் கதை எழுதும் படங்களை அவரே இயக்குவதுதான் வழக்கம். ஆனால், "நெற்றிக்கண்''ணை அவர் டைரக்ட் செய்யவில்லை. ஏற்கனவே, ரஜினியை வைத்து "புவனா ஒரு கேள்விக்குறி'', "முரட்டுக்காளை'' முதலிய வித்தியாசமான படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

வியப்பு-திகைப்பு

"நெற்றிக்கண்''ணை இயக்குவதற்கு பாலசந்தர் அழைப்பு அனுப்பியபோது, முத்துராமன் வியப்பும், திகைப்பும் அடைந்தார்.

`அவரே பெரிய டைரக்டர். அவர் படத்தை நாம் எப்படி டைரக்ட் செய்வது?' என்ற கேள்வி, அவரை பயமுறுத்தியது.

பாலசந்தரை சந்தித்துப் பேசியபின், அவருடைய பயம் மறைந்தது.

பாலசந்தர் சொன்னார்:-

"நான் வித்தியாசமான கதைகளை, என் பாணியில் டைரக்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

"நெற்றிக்கண், ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட கதை. இரட்டை வேடம். இதை கமர்ஷியல் படமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கள் ரஜினியை வைத்து, சிறப்பான படங்களை எடுத்திருக்கிறீர்கள். ரஜினி ஓர் நடிப்புச்சுரங்கம். அவரிடம் புதைந்துள்ள நடிப்பை, நீங்கள் இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

முழு சுதந்திரம்

திரைக்கதை, எழுதுவதுடன் என் வேலை முடிந்து விட்டது. படத்தை உங்கள் விருப்பப்படி எடுக்கலாம். எந்த ஒரு கட்டத்திலும் என் தலையீடு இருக்காது. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.

படத்தை சிக்கனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஏவி.எம். படங்களை எப்படி நிறைய செலவு செய்து எடுக்கிறீர்களோ, அதுபோல் எடுங்கள்."

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

இதனால் உற்சாகம் அடைந்த எஸ்.பி.முத்துராமன், "நெற்றிக்கண்''ணை சிறந்த முறையில் உருவாக்கினார்.

எங்கேயோ கேட்ட குரல்

"பஞ்சு அருணாசலம் கதையைச் சொன்னதுமே, படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். `பெண்கள் எந்த சபலத்துக்கும் ஆளாகக்கூடாது, மனசால் கூட தப்பு செய்யக்கூடாது என்ற மெசேஜ் இந்தக் கதையில் இருக்கிறது. எனவே இதில் நடிக்கிறேன்' என்றார்.

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. எல்லோரும் நன்கு நடித்தனர். இளையராஜாவின் `ரீ ரிக்கார்டிங்' (பின்னணி இசை சேர்ப்பு) படத்துக்கு பலமாக அமைந்தது.

இந்தப்படம் வெளிவந்த அதே தேதியில் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவனும் வெளிவந்தது. அதுவும் நான் டைரக்ட் செய்த படம்தான். அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தது ஒருவர்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இரண்டு படங்களும் முற்றிலும் மாறுபட்டவை. இரண்டும் வெற்றிகரமானவை.

"எங்கேயோ கேட்ட குரல்'' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தோம். படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஆனால் தேசிய விருது கிடைக்கவில்லை. என்றாலும் மக்களின் பாராட்டு நிறைய கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது"

ஸ்ரீ ராகவேந்திரர்

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

"ராகவேந்திரர் படத்தை இயக்கும்படி ரஜினியும், பாலசந்தரும் வற்புறுத்தியதால், அந்தப் பொறுப்பை ஏற்றேன். அந்தக் காலக்கட்டத்தில், புராணப் படங்களை தயாரிப்பதில் ஏ.பி.நாகராஜன் மிகவும் புகழ் பெற்றிருந்தார். அவருடைய "திருவிளையாடல்'', "கந்தன் கருணை'', "திருவருட்செல்வர்'' முதலான படங்கள் பெரும் வெற்றி பெற்றிருந்தன.

அவர் எடுத்த படங்களின் "வி.சி.டி''களை வாங்கி அனைத்தையும் போட்டுப் பார்த்தேன். அவற்றைப் பார்த்ததன் மூலம் புராணப்படத்தை இயக்கக்கூடிய மனோபலம் எனக்கு வந்தது. இந்த வகையில் ஏ.பி.நாகராஜனை என்னுடைய மானசீக குரு என்று கூறலாம்.

ரஜினிகாந்த், தன்னுடைய ஸ்டைல்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர். சண்டைக் காட்சிகளில் மிகவும் புகழ் பெற்றவர். இவை எல்லாம் இல்லாமல், ஒரு மகான் வேடத்தில் அவரை ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகப்பட்டோம். ராகவேந்திரரின் பலதரப்பட்ட தோற்றங்களில் `மேக்கப்' போட்டு பார்த்தோம். ரஜினி, தன்னுடைய முகபாவம், வேகமான நடை ஆகியவற்றையெல்லாம் மாற்றிக்கொண்டு பக்தி சிரத்தையோடு நடித்தார்.

படப்பிடிப்பு நடந்த காலத்தில் ரஜினி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தார். படப்பிடிப்பு குழுவினரும் விரதம் இருந்தோம்.

படம் முடிந்து, முதல் பிரதியை போட்டுப்பார்த்தபோது, "இந்தப் படத்தை எடுத்ததில் பெருமை அடைகிறேன்" என்று பாலசந்தர் கூறினார். ரஜினிகாந்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரஜினி ரசிகர்களும் இப்படத்தை ஏற்றுக்கொண்டனர்."

மனிதன்

படம் முடிந்ததும், முதல் பிரதியை ஏவி.எம்.சரவணன் பார்த்தார்.

பிறகு, டைரக்டர் முத்துராமனை அழைத்து, "படம் நன்றாக வந்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், படப்பிடிப்பு முடிந்து விட்டதால், இனி ஒன்றும் செய்ய வேண்டாம். இப்படியே இருக்கலாம்" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

முத்துராமன் யோசித்தார். சரவணன் கூறியபடி கிளைமாக்ஸ் சண்டையில் இன்னும் விறுவிறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கும் தோன்றியது. ஆனால் ரஜினியோ வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து, அதில் நடித்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை.

`எதற்கும் ரஜினியிடம் பேசிப்பார்ப்போம்' என்று கருதி, அவருக்கு போன் செய்தார். விஷயத்தைச் சொன்னார்.

அதற்கு ரஜினி, "சார்! நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து விடுகிறேன். அன்று மாலை வரை என்னை வைத்து எந்தக் காட்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சரவணன் சார் பாராட்டுகிற மாதிரி, கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து விடுங்கள்" என்று கூறினார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினியை வைத்து உச்சகட்ட காட்சிக்கு மேலும் விறுவிறுப்பு ஏற்படும்படியாக, சில காட்சிகளை எடுத்தார், முத்துராமன்.

இப்படி ரஜினியை வைத்து புதுக்காட்சிகள் எடுக்கப்பட்டது சரவணனுக்கே தெரியாது.

புதிய கிளைமாக்ஸ் காட்சி இணைக்கப்பட்டதும், சரவணனிடம் சென்றார், முத்துராமன். "நீங்கள் சொன்னபடி, சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். வந்து பாருங்கள்" என்று அழைத்தார்.

அதன்படி இறுதிக் காட்சிகளை போட்டுப் பார்த்தார், சரவணன். அப்படியே அசந்து போனார். "ரொம்பப் பிரமாதம்! எப்படி இவ்வாறு மாற்ற முடிந்தது?" என்று கேட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினி வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போனதைச் சொன்னார், முத்துராமன்.

உடனே சரவணன், ரஜினிக்கு போன் செய்து நன்றி தெரிவித்தார்.

2-10-1987 அன்று வெளிவந்த இந்தப்படம், வெள்ளி விழாவையும் தாண்டி, 200 நாட்கள் ஓடியது.

குரு சிஷ்யன்

ரஜினியும், பிரபுவும் முதன் முதலாக இணைந்து நடித்த படம் "குரு சிஷ்யன்.''

பஞ்சு அருணாசலத்துக்காக, குறுகிய காலத்தில் ஒரு படத்தை தயாரித்து கொடுக்க விரும்பினார், ரஜினி.

இதுபற்றி, டைரக்டர் எஸ்.பி.முத்துராமனை அழைத்துப் பேசினார். "இந்தப் படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் தருகிறேன். கவுரவ வேடத்தில் நடிக்கிறேன்" என்று ரஜினி கூறினார்.

"நீங்கள் கவுரவ வேடத்தில் நடிப்பதால், அது பஞ்சு அருணாசலத்துக்கு பெரிய அளவுக்கு உதவி செய்யாது. நீங்கள் ஹீரோவாக நடித்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் 25 நாள் கால்ஷீட்டிலேயே படத்தை எடுத்து விடலாம்" என்று முத்துராமன் சொன்னார்.

"அது எப்படி முடியும்? படத்தை முடிக்க 45 நாட்களாவது வேண்டாமா?" என்று கேட்டார், ரஜினி.

அதற்கு முத்துராமன், "இரண்டு ஹீரோக்கள் உள்ள நல்ல கதை ஒன்று இருக்கிறது. நகைச்சுவை கலந்த வேடம். நீங்களும், பிரபுவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும். படப்பிடிப்பை சென்னையில் நடத்தினால் தொந்தரவாக இருக்கும். குறிப்பிட்ட நாளில் முடிக்க முடியாது. மைசூருக்கு போய்விடுவோம். வேகமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கலாம்" என்றார்.

ரஜினி சம்மதித்தார்.

பிரபு, ஏற்கனவே ரஜினியின் விசிறி. மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியுடன் நடித்தார்.

பிரபு மீது ரஜினிக்கு மிகுந்த அன்பு. தான் செய்யவேண்டிய ஒரு சண்டைக்காட்சியை பிரபுவுக்கு கொடுக்கும்படி சொன்னார். பிரபு சண்டை செய்வதை பார்த்து, "ஆகா, பிரமாதம்!" என்று உற்சாகப்படுத்தினார்.

ரஜினி 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 23 நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டன. "நீங்கள் சென்னைக்குத் திரும்பலாம்" என்று ரஜினியிடம் முத்துராமன் கூற, "இல்லை. இன்னும் 2 நாட்கள் உங்களுடனேயே தங்கியிருக்கிறேன்" என்று ரஜினி சொல்லிவிட்டார்.

"அதன்படியே படப்பிடிப்பு குழுவினருடன் 2 நாள் தங்கி, அவர்களுடன் சாப்பிட்டு, எல்லோருடனும் அன்புடன் பேசி மகிழ்வித்தார், ரஜினி. படப்பிடிப்பின்போது, டிராலியைக் கூட தள்ளி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்" என்று முத்துராமன் கூறினார்.

13-4-1988-ல் வெளிவந்த "குரு சிஷ்ய"னில், அருமையான நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன. ரஜினி - பிரபு கூட்டணி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

படம், 125 நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடியது.

ராஜா சின்ன ரோஜா

இந்தப் படத்தில் ரஜினி, கவுதமி மற்றும் 5 குழந்தைகள் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்று வருகிறது. அந்த பாடல் காட்சியில், இந்த 7 பேருடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கள் (கார்ட்டூன்களாக) ஆடிப்பாடுவது போல் படமாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கள் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கள் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை.

இப்படி கார்ட்டூன் காட்சிகள் அமைப்பதில், மும்பையைச் சேர்ந்த ராம்மோகன் பெரிய நிபுணர். அவர் ரொம்ப `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது.

எனவே, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முத்துராமனை அழைத்து, "படத்துக்கு இந்த அனிமேஷன் காட்சி முக்கியம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதை சிறப்பாக எடுக்க வேண்டும். `அனிமேஷன்' நிபுணர் ராம்மோகன் ரொம்ப பிசியாக இருப்பதாக அறிந்தேன். நீங்கள் உடனடியாக மும்பை சென்று, அவருடைய சம்மதத்தைப் பெற்று வாருங்கள்" என்றார்.

பூஜை அன்றே பயணம்

எனவே, படத்துக்கு பூஜை போடப்பட்ட அன்றே விமானம் மூலமாக முத்துராமன் மும்பை சென்றார். ராம்மோகனை சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.

"இந்த மாதிரியான `அனிமேஷன்' பாடல் காட்சி எடுக்க, நான் 80 ஆயிரம் படங்களை வரையவேண்டும். அதற்கு ரொம்ப அவகாசம் வேண்டும். இப்போது எனக்குள்ள வேலையில், இந்த பொறுப்பை ஏற்பது இயலாத காரியம்" என்று ராம்மோகன் கூறினார்.

ஆனால், முத்துராமன் விடவில்லை. "ஏவி.எம். எதையும் திட்டமிட்டு படமாக்கும் நிறுவனம். இந்த பாடல் காட்சியை முதலாவதாக படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உடனடியாக நீங்கள் படம் வரைய ஆரம்பித்துவிடலாம். அதன்பின் 6 மாதம் கழித்துத்தான் படம் ரிலீஸ் ஆகும். உங்கள் வேலையை செய்து முடிக்க, போதுமான அவகாசம் கிடைக்கும்" என்றார்.

அதன் பேரில், கார்ட்டூன்கள் வரைய ராம்மோகன் சம்மதித்தார்.

படமாக்கியது எப்படி?

"இந்தக் காட்சியை படமாக்கியது எப்படி?" என்று முத்துராமனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

"இந்த பாடல் காட்சியில் ரஜினி, கவுதமி ஆகியோருடன் 5 குழந்தைகள் பங்கு கொண்டார்கள்.

அவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கள் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும் என்பதையெல்லாம் உதவியாளர்கள் விளக்கி, நடித்துக் காட்டினார்கள்.

அந்த மிருகங்கள் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கள்.

இதை நாங்கள் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்கள் வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம்.

சிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.

`குழந்தைகளை பெற்றோர்கள் பொறுப்போடு வளர்க்க வேண்டும். வேலைக்காரர்களிடம் விட்டுவிடக்கூடாது' என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.

குழந்தைகள்

இந்தக் காட்சியின் மூலம், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மனதை ரஜினி வெகுவாகக் கவர்ந்தார்.

எங்கு போனாலும், "ரஜினி அங்கிள், ரஜினி அங்கிள்" என்று குழந்தைகள் கூடிவிடுவார்கள்.

ஒருநாள் மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியும், படப்பிடிப்புக்குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம்.

ஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகள் கூடி நின்றார்கள். அனைவரும் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தார்கள்.

`ரஜினி அங்கிள் இந்த வழியாக வருவதாகக் கேள்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பள்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கள்.

அவர்களுடன் ரஜினி அன்புடன் பழகினார். ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். "நன்றாகப் படிக்க வேண்டும்" என்று முத்தம் கொடுத்து வாழ்த்தினார்."

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.