விஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார், பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார். விஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும். ரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது. 10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற "வெண்மேகமே'' என்ற பாடல் மிகப்பிரபலம்.