Ranuva Veeran

Ranuva Veeran - Image

சொன்னால் தானே தெரியும்

சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு (சொன்னால்)

மான் விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே

பூமழை வான் மேகம் பூமியை மறக்காது
காலங்கள் கனிந்தாலே...
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ

கண்ணா... உன்னை தெரியும்
உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்பு
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு

கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே

பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
மனிதர்களினம் போலே
பறவைகள் கடமையை அறியாது...(சொன்னால்)

நதியினில் வெள்ளம் வருகிற போது
நாணலை நீ பாரு......
நாணலை போலே வாழவும் தெரிந்தால்
வாழ்க்கையில் துயரேது...

நாணலும் நானில்லை
நானொரு பெண்பிள்ளை
வாலிபம் போனாலே...
வாழ்க்கையில் வசந்தமும் வாராது...(சொன்னால்)

ஓ....மல்லிகப்பூ வாசத்திலே

ஓ....மல்லிகப்பூ வாசத்திலே உன்னை
மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி...

தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகின்றதே ஓ...(மல்லிகப்)

மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது தேரு
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு

திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
முன்னாலே போகையிலே முந்தானை ஆடயிலே
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு

மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே ஓ.(மல்லிகப்)

ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
பாடு மாலையிடும் மாப்பிள்ளை மனதை பாடு

ஆத்தோரம் தீரத்திலே காத்தாடும் நேரத்திலே
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே
ஆளான காலம் முதல் தாளாமல் ஏங்குறேன்
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்

ரத்தின கம்பள சித்திரை மேனியில்
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டும் ஓ...(மல்லிகப்)

வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்

வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
சொல்லுங்கள்.......
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்....(வாருங்கள்)

ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு

கூடுங்கள் கோடை இடிபோலே குரல்கள் கர்ஜிக்கும்
கொள்கை சிங்கங்கள் கூடுங்கள்
ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற
கேணி தவளைகள் ஓடுங்கள்......(வாருங்கள்)

இந்த ராணுவ வீரன் காவலிலே
எந்த வீடும் பிழைத்திருக்கும்
ஒரு தீவிரவாதி கோபத்திலே
பெரும் தீமைகள் விளைந்திருக்கும்

எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும் மார்க்கம்
எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள்
எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல்
புதிய வரலாற்றை எழுதுங்கள்.....(வாருங்கள்)